கும்பகோணம் பள்ளி தீ விபத்து: அரசு வழக்கறிஞர் என்ன சொல்கிறார்?
சென்னை: கும்பகோணம் தீ விபத்தில் படுகாயம் அடைந்த குழந்தைகள் இன்றுவரை சிகிச்சை பெற்று வருவதாக அரசு வழக்கறிஞர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியாகினர். இந்த வழக்கில் 10 ஆண்டுகள் கழித்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து அரசு வழக்கறிஞர் மதுசூதனன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
குழந்தைகள்
16.6.2004 அன்று கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 94 குழந்தைகள் பலியாகினர், 18 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த குழந்தைகள் தீக்காயத்திற்காக இன்று வரை சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சாட்சியங்கள்
தீ விபத்து குறித்து அப்போதைய எஸ்.பி. ராஜேந்திரனின் உத்தரவின்பேரில் ஏ.எஸ்.பி. கல்யாண சுந்தரம் விசாரணை நடத்தினார். அரசு தரப்பில் மொத்தம் 298 பேர் சாட்சிகளாக கருதப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
குற்றப்பத்திரிக்கை
தீ விபத்து வழக்கில் 21 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 3 பேர் அரசு தலையீட்டின்பேரில் விடுவிக்கப்பட்டனர்.
நீதிமன்றம்
தீ விபத்து வழக்கு 2007ம் ஆண்டு வரை கும்பகோணத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றம் ஜே.எம்.1ல் நடந்து வந்தது. பின்னர் இந்த வழக்கு தஞ்சை முதலாவது அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு 2012ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் வழக்கை விசாரித்து 6 மாதத்திற்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.
தீர்ப்பு
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து விசாரணை நடத்தி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது என்றார்.