நேற்று ராகுல்... இன்று சோனியா... டெல்லியில் குஷ்பு சந்திப்பு.. என்ன நடக்கிறது காங்கிரஸில்??
டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தியை அக்கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு சந்தித்து பேசினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் நியமிப்பது தொடர்பாக குஷ்புடன் சோனியா ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு அடுத்த தலைவர் யார் என்ற போட்டி உச்சத்துக்கு வந்துள்ளது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ராஜினாமா செய்தபிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள் எல்லோரும் ராகுல்காந்தி, சோனியா காந்தியை தனித்தனியாகச் சந்தித்துவருகிறார்கள்.
வசந்தகுமார், செல்வக்குமார், ராஜ்குமார், ஜெயக்குமார், தங்கபாலு, விஜயதாரிணி, கராத்தே தியாகராஜன் என பலரும் டெல்லி சென்று ராகுலைச் சந்தித்திருக்கிறார்கள். ராகுல் எல்லோரிடமும் பத்து பத்து நிமிடம் பேசியிருக்கிறார். பீட்டர் அல்போன்ஸ் மட்டும்தான் ராகுல், சோனியா இருவரையும் சந்தித்திருக்கிறார்.
மூப்பனார் இறந்து தமிழ்மாநில காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் மீண்டும் இணைந்த பிறகு தலைவர், செயல் தலைவர் என்ற இரண்டு பதவிகள் கொண்டுவரப்பட்டன. அதேபோல், இம்முறையும் கொண்டுவரலாம் என்று ராகுல் நினைப்பதாக டெல்லி காங்கிரஸ் வட்டார தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில், அகில இந்திய காங்கிரசின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரும், நடிகையுமான குஷ்பு ராகுல்காந்தியை இன்று டெல்லியில் சந்தித்தார். சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, தமிழக அரசியல் நிலைமை குறித்து ராகுல்காந்தியிடம் பேசியதாக கூறினார்.
என்னை தலைவராக நியமிப்பது குறித்து கட்சி மேலிடம்தான் முடிவு செய்யவேண்டும். கட்சித் தலைவராக நியமிப்பது என்று முடிவெடுத்தால் அதில் எனக்குச் சம்மதம் என்று கூறிய அவர் அதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது இல்லை என்றார். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த தலைவர் யார்? என்று சோனியாகாந்தி விரைவில் அறிவிப்பார் என்றும் கூறினார்.
குஷ்புவின் இந்த பேட்டியால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவருக்கான போட்டி களம் பரபரப்பாகியுள்ளது. இதுவரை, இந்தப் பந்தயத்தில் திருநாவுக்கரசு, பீட்டர் அல்போன்ஸ், கராத்தே தியாகராஜன் ஆகியோர் கடும்போட்டியில் இருந்தனர். இப்போது குஷ்புவும் இணைந்தார்.
இந்தநிலையில் காங்கிரஸ் கட்சித்தலைவி சோனியா காந்தியை அவரது இல்லத்தின் இன்று குஷ்பு சந்தித்து பேசினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் நியமிப்பது தொடர்பாக குஷ்புடன் சோனியா ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சோனியா காந்தியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, கட்சித்தலைவி சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாக கூறினார். காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி, ராகுல்காந்திக்கு ஆதரவாக மட்டுமே தாம் செயல்படுவதாகவும் குஷ்பு கூறினார்.