பச்சை பட்டுடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர் - மழை பெருகும், விவசாயம் செழிக்கும்
பச்சை பட்டுடுத்தி தங்கக்குதிரை வாகனத்தில் கம்பீரமாக பவனி வந்த கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மதுரை: பச்சை பட்டுடுத்தி ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிந்து தங்கக்குதிரை வாகனத்தில் ஏறி வந்த கள்ளழகர் வைகையில் எழுந்தருளினார். இன்று காலை 6:15 மணிக்கு மேல் காலை 7:00 மணிக்குள் வைகையில் எழுந்தருளி அருள் பாலித்த கள்ளழகரை லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
சித்திரை திருவிழாவின் மிக முக்கிய வைபவமான கள்ளழகர் வைகையில் இறங்கும் வைபவத்துக்காக திங்கட்கிழமை மாலையில் அதிர்வேட்டுக்கள் முழங்க அழகர் மலையிலிருந்து இருந்து புறப்பட்டார்.
அப்பன்திருப்பதி, கள்ளந்திரி என வழிநெடுக பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து பவனி வந்த கள்ளழகர் செவ்வாய்கிழமை காலையில் மதுரைக்கு வந்தார். மூன்றுமாவடியில் அழகரை எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நேற்று காலை நடந்தது.
தீபம் ஏற்றி வரவேற்பு
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சர்க்கரைக்கிண்ணத்தில் தீபம் ஏற்றி அவரை எதிர்கொண்டு வரவேற்றனர். அப்போது 'கோவிந்தா' 'கோவிந்தா' என்று கோஷமிட்டு தரிசனம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். எங்களை காணவந்த, காக்க வந்துள்ள அழகரை நாங்கள் வரவேற்கிறோம் என்று பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
பக்தர்கள் உற்சாகம்
தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு அழகர் புறப்பாடாகி அம்பலக்காரர் மண்டபத்துக்கு வந்தார். பின்னர் வழிநெடுகிலும் பக்தர்களின் வரவேற்பினையும், காணிக்கைகளையும் ஏற்றுக்கொண்ட பெருமாள் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவிலிலுக்கு இரவு வந்தடைந்தார்.
ஆண்டாள் சூடிய மாலை
அங்கு திருமஞ்சனமாகி நள்ளிரவு 12 மணிக்கு பச்சை பட்டுடுத்தி, திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கொண்டு, பதங்கக் குதிரை வாகனத்தில் ஏறி தமுக்கம் கருப்பண சுவாமி கோவிலுக்கு வந்தார். அங்கு ஆயிரம் பொன் சப்பரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தண்ணீர் பீய்ச்சி உற்சாகம்
அதிகாலையில் வைகை ஆற்றுக்கு வந்த அழகரை அக்னி வெயில் பாதிக்குமோ என்று தண்ணீரை பீய்ச்சி அடித்தும், விசிறிகளை வீசியும் பெருமாளை வணங்கினர். வைகை ஆற்றில் எழுந்தருள வந்த பெருமாளை உற்சாகம் பொங்க கோவிந்தா முழக்கமிட்டு வழங்கினர். அழகரை வரவேற்பதற்காக கள்ளழகர் வேட மணிந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வந்துள்ளனர்.
வைகையில் எழுந்தருளல்
வெள்ளிக்குதிரை வாகனத்தில் காத்திருந்த வீர ராகவப் பெருமாள் தங்கக்குதிரையில் ஏறி வந்த கள்ளழகரை எதிர் கொண்டு வரவேற்றார். இன்று காலை மேற்கே முழுநிலவு பிரகாசிக்க, கிழக்கே சூரியன் உதயமான நேரத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளி லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலித்தார் கள்ளழகர். இந்த நிகழ்ச்சியை காண வைகை ஆற்றில் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டனர். மதுரை மாநகரம் முழுவதும் மனித தலைகளாக காட்சியளிக்கிறது.
பச்சை பட்டு
வைகையில் எழுந்தருளிய கள்ளழகர் பச்சை பட்டுடுத்தி ஆடி ஆடி வைகையில் இறங்கிய கள்ளழகரை உற்சாகத்துடனும் பக்தி பரவசத்துடனும் குழுமியிருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு அழகர் பச்சை பட்டு அணிந்து வைகையில் எழுந்தருளியதால் மழை வளம் பெருகும் விவசாயம் செழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மக்கள் வெள்ளம்
வறட்சி காரணமாக வைகையில் தண்ணீர் இல்லை என்பதால் தண்ணீர் நிரப்பட்ட இடத்தில் அழகர் எழுந்தருளினார். ஆனால் மக்கள் வெள்ளத்தால் வைகை ஆறு பொங்கிப் பெருகியது.
வைகையில் இறங்கிய அழகர் மண்டபத்தில் ஓய்வெடுத்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். வைகையில் எழுந்தருளும் நிகழ்வு ஆண்டு தோறும் நடப்பதுதான் என்றாலம் அழகர் மலையில் இருந்து மதுரைக்கு வந்த அழகரை காண்பதே பிறவிப்பலன் என்கின்றனர் மக்கள்.