எம்பி விஜிலா சத்தியானந்த் மீது நில அபகரிப்பு புகார்.. அதிமுகவில் பரபரப்பு
அதிமுக ராஜ்யசபா எம்பி விஜிலா சத்தியானந்த் மீது நில அபகரிப்புப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை : நெல்லை அதிமுக ராஜ்யசபா எம்.பி. விஜிலா சத்தியானந்த் நில மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த வசீகரன் என்பவர், இன்று நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், நெல்லையில் தங்களுக்குரிய 3.5 ஏக்கர் நிலத்தை போலியான ஆவணங்கள் மூலம் பதிவு செய்து, அதிமுகவின் ராஜ்யசபா பெண் எம்.பி., விஜிலா சத்தியானந்த் விற்பனை செய்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக பார்லிமென்ட் நடவடிக்கை குழுவிற்கு அனுப்பிய ஆவணங்களையும் கலெக்டரிடம் காண்பித்தார்.
அதிமுகவின் சில அமைச்சர்களைத் தொடர்ந்து தற்போது அதிமுக எம்.பி., ஒருவர் மீதும் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜிலா சத்தியானந்த் கடந்த வாரம் தினகரனை சந்தித்து, தனது ஆதரவை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அவர் மீது நில அபகரிப்புப் புகார் எழுப்பப்பட்டுள்ளது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் அதிமுக வட்டாரத்தில் எழுப்பியுள்ளது.