தூத்துக்குடி மின் நிறுவன அதிகாரிகள் மீது நில அபகரிப்புப் புகார்!
தூத்துக்குடி: தூத்துக்குடியைச் சேர்ந்த கோஸ்டல் எனர்ஜென் மின் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மீது நில அபகரிப்புப் புகார் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, குறுக்குச்சாலையைச் சேர்ந்த மகேஷ் என்பவர் இந்தப் புகாரைக் கொடுத்துள்ளார். இதையடுத்து தருவைக்குளம் போலீஸார், நிறுவனத்தின் நிர்வாக அலுவலர் பீர்முகமது, ஓய்வு பெற்ற தாசில்தார் செல்வராஜ், முன்னாள் கடலோர போலீஸ் படை அலுவலர் ராமநாதன், சங்கர் உள்ளிட்ட பத்து நபர்கள் மீது 147, 148, 294பி, 506 (1) ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மகேஷ் தனது புகாரில், தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா டி.துரைச்சாமிபுரம் கிராம புல எண் 347/3 விஸ்தீரணம் 3 ஏக்கர் நிலம் எனக்கு பாத்தியப்பட்டு விவசாயம் செய்து வருகிறேன். இப்பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கோஸ்டல் எனர்ஜென் (பி) லிமிடெட் நிறுவனத்தினர் மின் உற்பத்தி நிலையம் அமைத்து வருகின்றனர்.
இதற்காக என்னுடைய நிலத்தை ஆக்கிரமித்து அதில் கோட்டைச் சுவர் கட்டி அபகரிக்க முயலுகின்றனர்.
இது சம்பந்தமாக தூத்துக்குடி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு (வழக்கு எண் : 424/09) நடைபெற்று வருகிறது. மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் (வழக்கு எண் : WP(MD) No. 1244 to 1247/2012 ) தடையாணையும் பிறப்பித்துள்ளனர்.
ஆனால், கோஸ்டல் எனர்ஜென் நிறுவனத்தினர் அடியாட்களுடன் வந்து, அரசியல்வாதிகளின் துணையோடு குழாய் பதித்து, சாலைகள் அமைத்து, கட்டடம் கட்ட முயற்சித்து வருகிறார்கள். இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் 31.01.2013 அன்று புகார் தெரிவித்தேன். அவர்கள் 01.02.2013 அன்று ஒப்புதல் பெற்றுள்ளனர்.
மேலும் 11.02.2013 அன்று தருவைக்குளம் காவல்நிலையத்திலும் புகார் கொடுத்தேன். அங்குள்ள காவல் ஆய்வாளர், அந்த சொத்திற்குள் நுழைந்தால், கோஸ்டல் நிறுவனத்தின் வேலையைத் தடுத்தால் உன் மீது வழக்குப் போட்டு உள்ளே தள்ளி விடுவேன் என்று மிரட்டினார். பின்னர் முதல்வரின் தனிப்பிரிவுக்கும் மனுக் கொடுத்தேன். அதற்கு 11.06.2013 முதல் மூன்று நாட்கள் தருவைக்குளம் காவல்நிலையத்தில் தொடர் விசாரணை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் 19.03.2013, 27.06.2013, 05.07.2013 ஆகிய தேதிகளில் புகார் கொடுத்துள்ளேன். இந்நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போதே எங்கள் பகுதி விவசாய நிலங்களில் கோட்டை சுவர் கட்ட முயற்சி செய்தனர். இதைத் தடுக்க நிலத்தின் உரிமையாளராகிய நான் முயற்சி செய்தேன்.
ஆனால், அங்கு வந்த கோஸ்டல் நிறுவன நிர்வாக அலுவலர் பீர் முகமது, ஓய்வுபெற்ற தாசில்தார் செல்வராஜ், ராமநாதன், காவலாளி சங்கர் உள்ளிட்ட பத்து பேர் என்னை மிரட்டி அடித்து உதைத்து விரட்டி விட்டனர் என்று கூறியுள்ளனர்.
இதேபோல தற்போது மேலும் பலரும் தூத்துக்குடி நிறுவனம் மீது கலெக்டர் மற்றும் எஸ்.பி.யிடம் புகார் கொடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications