தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகிறது... வைகோ கூறும் எடுத்துக்காட்டுகள்
சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேசிய குற்ற ஆவணக்காப்பகம் வெளியிட்ட அறிக்கையில், 2014-ம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் தலித் வகுப்பை சேர்ந்த 72 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நாலரை ஆண்டுகளில் பெண்கள் மீதான வன்கொடுமை குற்ற வழக்குகள் மட்டும் 14,545 நிலுவையில் உள்ளன. இதில் 1,751 வழக்குகள் பாலியல் வன்கொடுமைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

காவல்துறை, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்காமல், அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதற்கும், மதுக்கடைகளை மூடக்கோரி தன்னெழுச்சியாக நடக்கும் மக்கள் போராட்டங்களை நசுக்குவதற்கும் ஏவிவிடப்படுவது வன்மையான கண்டனத்துக்கு உரியது.
தஞ்சை மாவட்ட சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் மீது வடசேரி அருகே தாக்குதல் நடத்த முயன்றதும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சேஷசமுத்திரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதற்கு எடுத்துக்காட்டுகள். எனவே தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் சமூக விரோதிகளை ஒடுக்க வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications