சுவாதி கொலை வழக்கு: போலீசார் முறையாக விசாரிக்கவில்லை.. ராம்குமாரை சந்தித்த பின் வக்கீல் பேட்டி
சென்னை: இன்போசிஸ் ஊழியர் சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கின் பின்னணி குறித்து போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை எனவும் ஒரு சம்பிரதாயமாகவே விசாரணை நடைபெற்று வருவதாகவும் ராம்குமாரின் வழக்கறிஞர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து வாலிபர் ஒருவரால் சுவாதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக, நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். கைது செய்ய போலீசார் முயன்றபோது அவர் கழுத்தை வெட்டி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிகிச்சைக்குப் பின்னர் ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது நுங்கம்பாக்கம் காவல்நிலைய போலீசாரின் மனுவை ஏற்று, ராம்குமாரை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது சென்னை எழும்பூர் நீதிமன்றம்.
இதையடுத்து ராம்குமார் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம் சுவாதி நண்பர் பிலால் சித்திக்கிடமும் போலீசார் விசராணை நடத்தினர்.
இந்நிலையில் நீதிமன்ற நிபந்தனையின்படி ராம்குமாரை சந்திக்க அவரது வழக்கறிஞர் ராமராஜூக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இது தொடர்பாக இன்று அவர், எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் கூறியுள்ளார். இதனிடையே வக்கீல் ராம்ராஜ் உதவியாளர் ரவீந்திரன், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ராம்குமாரை சந்திக்க அனுமதிக்கப்பட்டார்.
ராம்குமாரை சந்தித்த பின்னர் வக்கீல் ரவிந்தீரன் கூறுகையில், சுவாதி கொலை வழக்கு பின்னணி குறித்து போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை. இதுவரை ராம்குமார் தங்கியிருந்த மேன்சன் மற்றும் சம்பவம் நடந்த இடத்திற்கோ அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தவில்லை.
ராம்குமாருக்கு சுவாதியின் நண்பர் பிலால் மாலிக் யார் என்றே தெரியவில்லை. கழுத்தில் தையல் போட்டுள்ளாதல் வலிப்பதாக ராம்குமார் தெரிவித்தார்.தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாக அவர் தெரிவித்தார்.மேலும், நாளை ராம்குமாரின் பெற்றோரை சந்திக்க உள்ளோம். அதன் பிறகு சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று வக்கீல் ரவீந்திரன் தெரிவித்தார்.