ஸ்டெல்லா மேரீஸில் ஜெ... சாரதா ஸ்கூலில் கருணாநிதி... சாலிகிராமத்தில் விஜயகாந்த்!
சென்னை: தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில் கலந்து கொண்டு வாக்களிக்க மக்களைப் போலவே தலைவர்களும் தயாராகி வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா முதல் நடிகர் கார்த்திக் வரை அத்தனை தலைவர்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாக்களிக்கவுள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் சென்னையில் வாக்களிக்கவுள்ளனர்.
தலைவர்கள் எங்கு வாக்களிக்கவுள்ளனர் என்பது குறித்த ஒரு ரவுண்ட் அப்...
ஸ்டெல்லா மேரீஸ் - ஜெயலலிதா, ரஜினி
முதல்வர் ஜெயலலிதா தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் வாக்களிப்பார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் கார்த்திக் ஆகியோரும் இங்கேயே வாக்களிப்பார்கள்.
கோபாலபுரம் சாரதா பள்ளி - கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி, கோபாலபுரம் 2வது தெருவில் உள்ள சாரதா பள்ளியில் வாக்களிப்பார். அவரது குடும்பத்தினர் பலரும் இங்கேயே வாக்களிப்பார்கள்.
கலிங்கப்பட்டி - வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் வாக்களிப்பார்.
திண்டிவனத்தில் ராமதாஸ்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திண்டிவனத்தில் உள்ள ஸ்ரீமரகதாம்பிகை பள்ளியில் வாக்களிப்பார்.
செந்துறை அருகே திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள அங்கனூர் கிராமத்தில் வாக்களிப்பார். இதுதான் அவரது சொந்த ஊராகும்..
கண்டனூரில் ப.சிதம்பரம்
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் காரைக்குடி அருகே கண்டனூரில் உள்ள பள்ளியில் வாக்களிப்பார்.
ராதாகிருஷணன் சாலையில் கனிமொழி
திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி சென்னை ராதாகிருஷ்ணன் உட்லண்ட்ஸ் ரோடு எதிரே உள்ள ஸ்வென்தபா பள்ளியில் வாக்களிப்பார்.
சாலிகிராமத்தில் விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சாலிகிராமத்தில் உள்ள காவேரிப்பள்ளியில் வாக்களிப்பார்.
கொட்டிவாக்கத்தில் சரத்குமார்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தனது வாக்கை கொட்டிவாக்கம் பகுதியில் செலுத்துவார்.