கம்யூனிஸ்டுகளை முட்டுச் சந்தில் நிறுத்தி முக்காடு போட வைத்த வைகோ
சென்னை: தமிழகத்தின் வரலாற்றிலேயே இடதுசாரிகள் இல்லாத சட்டசபை அமைந்துள்ளது. தமிழகத்தில் இடதுசாரி கட்சிகளை இப்படி அஸ்தமிக்க விட்டதே மதிமுக பொதுச்செயலர் வைகோவுடனான 'கூடா' நட்புதான்.
தமிழகத்தில் 1960களில் திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு அடுத்த இடத்தில் இருந்தது கம்யூனிஸ்ட் கட்சி. பின்னர் திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து இடம் பெற்று கவுரவமான எண்ணிக்கையில் சட்டசபையில் இடம்பெற்றிருந்தனர்.

2011 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடதுசாரி கட்சிகள் இரண்டுக்கும் மொத்தம் 22 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 19 இடங்களில் இடதுசாரிகள் வென்றனர்... இப்படித்தான் திமுக, அதிமுக தோளில் சவாரி செய்து கவுரமாக காலத்தை ஓட்டி வந்தது இடதுசாரிகள்.
ஆனால் திடீரென மதிமுக பொதுச்செயலர் வைகோவுடன் கை கோர்த்துக் கொண்டு திராவிட கட்சிகளை வீழ்த்த புறப்பட்டுவிட்டோம் என சங்கநாதம் எழுப்பினர். பின்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்தையே முதல்வர் வேட்பாளராக கொஞ்சமும் வெட்கமே இல்லாமல் இடதுசாரிகள் ஏற்றனர். அதோடு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியையும் இணைத்துக் கொண்டனர்.
கொள்கை, சித்தாந்தம், தத்துவம் என்றெல்லாம் பேசுகிற இடதுசாரிகள், மதவாத பாஜகவுடன் கூட்டணி வைத்து பேரம் பேசிக் கொண்டிருந்த தேமுதிகவை கொஞ்சமும் கூச்சப்படாமல் ஏற்றுக் கொண்டதை நடுநிலையார்கள் எவருமே சகிக்கவில்லைதான். அதுவும் அரசியலில் அரிச்சுவடியே தெரியாத விஜயகாந்த் மனைவி பிரேமலதாவை வாய் கூசாமல் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சண்டமாருதமாக நிற்கும் இடதுசாரிகள் வானளாவ புகழ்ந்த கேவலத்தை தமிழகம் சகிக்கவில்லை.
வைகோவுக்கு வேண்டுமானால் கருப்பு துண்டு; அதற்கு மேல பச்சை தலைப்பாகட்டு என இஷ்டத்துக்கு தம்மை உருமாற்றுவது கைவந்த கலையாக இருக்கலாம். ஆனால் சித்தாந்தவாதிகளாக அறியப்பட்டு நல்லகண்ணு போன்ற போற்றுதலுக்குரிய பெருந்தலைவர்களை வைத்துக் கொண்டு வைகோவின் புதிய மாற்று அணி மாயையில் சிக்கி இன்று முச்சந்தியில் நின்று முக்காடு போடும் நிலைக்கு வந்துவிட்டனர் இடதுசாரிகள்.
தேர்தல் அரசியலில் பழுத்த பழமான இடதுசாரிகள் இப்போது அழுகிப் போன நிலையில் தமிழக மக்களால் தூக்கி எறியப்பட்டிருப்பதை நடுநிலையாளர்கள் எவருமே விரும்பவில்லைதான்... என்ன செய்வது? அதிமுக கொடுத்திருக்க கூடிய 5 அல்லது 8 தொகுதிகளைப் பெற்றுக் கொண்டோ அல்லது திமுக கொடுத்திருக்க கூடிய 10 அல்லது 15 தொகுதிகளைப் பெற்று கவுரமான மரியாதையைப் பெறவே முடியாது என வைகோவுடன் சேர்ந்து கங்கணம் கட்டிக் கொண்டால் இந்த நிலைமைதான் வரும்...
மதிமுக என்ற கட்சியை கலைத்துவிட்டு அது பெரியார் இயக்கமாக செயல்படும் என்ற அறிவிப்பை வைகோ விரைவில் வெளியிட்டு விடுவார்.... ஆனால் இடதுசாரிகளின் பயணம் தொடரக் கூடியது... நேற்று பிறந்த நாம் தமிழர் கட்சி கூட கவுரவமாக 1%க்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்றிருக்கிறது... அரை நூற்றாண்டை கடந்த இடதுசாரிகளோ அதை கூட பெற முடியாத படுபரிதாப நிலைக்கு போய்விட்டது...
இந்த லட்சணத்தில் இன்னமும் மக்கள் நலக் கூட்டணி தொடரும் என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன்... அதுசரி... அப்படி மக்கள் நலக் கூட்டணியில் தொடர்ந்தும் இடதுசாரிகள் நீடித்தால் அது கத்தியால் தானே கழுத்தை அறுத்துக் கொள்வேன் என அடம்பிடிப்பதுதானே தவிர வேறொன்றுமே இல்லை...












Click it and Unblock the Notifications