தேமுதிக வேட்பாளராகி 'உடம்புக்கு முடியாம' பின்வாங்கிய மகேஸ்வரன் அதிமுகவில் இணைகிறார்?
சென்னை: தேர்தல் சமயத்தில் என்ன நடக்கின்றதோ இல்லையோ,வேட்பாளர்களுக்கு இடையிலான குளறுபடிகளுக்கும்,போராட்டங்களுக்கும் மட்டும் குறைவில்லை.
அப்படித்தான் இங்கும் சில வேட்பாளர்களின் கலாட்டாக்கள் பட்டியல் இடப்பட்டுள்ளன.
நாமக்கல் தொகுதி தேமுதிக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த மகேஸ்வரன் உடல்நிலையை காரணம் காட்டி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கிவிட்டார்.
அதிமுகவில் இணைய முடிவு:
இன்று முதல்வர் ஜெயலலிதா பகல் 2 மணியளவில் நாமக்கல்லில் பிரசாரம் செய்தார். அவர் பேசி முடித்ததும் அதிமுகவில் இணைவது குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் மகேஸ்வரன்.
தர்ணா செய்த வேட்பாளர்:
மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளரான ரவீந்திரன் வேட்புமனுவை தாக்கல் செய்யாமல் தர்ணா போராட்டம் செயதார்.
நான் வக்கீல் கூடத்தான் வருவேன்:
ஷெனாய் நகரில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்ய வந்த அவர் தனது வழக்கறிஞரையும் உள்ளே அனுமதிக்குமாறு கேட்டார். அதற்கு தேர்தல் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததால் வேட்புமனு தாக்கல் செய்யாமல் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தார்.
சமத்து ஜி.கே.மணி.:
கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளரான கட்சித் தலைவர் ஜி.கே.மணி இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தேர்தல் அதிகாரி ராஜேஷிடம் இவர் தனது வேட்புமனுவை அளித்தார்.