அண்ணா பல்கலையில் பி.ஹெச்டி ஆய்வு படிப்பிலும் மெகா ஊழல்.. அதிர்ச்சி தகவல்
அண்ணா பல்கலையிலுள்ள பிஹெச்டி ஆராய்ச்சி துறையிலும் அதிக அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

சென்னை: அண்ணா பல்கலையிலுள்ள பிஹெச்டி ஆராய்ச்சி துறையிலும் அதிக அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேட்டில் 400 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டு முறைகேடு நடந்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர்.
அண்ணா பல்கலைக்கழக இன்ஜினியரிங் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை வெற்றிபெற வைக்க மறுகூட்டலின் போது லஞ்சம் வாங்கி இருக்கிறார்கள். ஒரு பாடத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளது.

மறுமதிப்பீட்டில் முறைகேடு
2017 கல்வி ஆண்டில் அண்ணா பல்கலையில் இந்த மோசடி நடந்து நடந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 2015-2018 வரை தேர்வுக்கான கட்டுப்பாட்டாளராக இருந்த ஜி.வி.உமா தலைமையில்தான் இந்த முறைகேடு நடந்துள்ளது தெரியவந்தது.

4 பேர் சஸ்பென்ட்
இதையடுத்து பேராசிரியை உமா மற்றும் திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி முதல்வர் விஜயகுமார் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இரண்டு உதவி பேராசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பிஹெச்டி துறையிலும் மோசடி
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பிஹெச்டி எனும் ஆய்வுதுறையிலும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கடந்த 2013 ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு கால கட்டம் வரை பிஹெச்டி மாணவர்களை அதிக அளவில் சேர்க்கை செய்துள்ளனர்.

சிக்கலின்றி முனைவர் பட்டம்
பிஹெச்டி மாணவர்களின் ஆய்வுப்படிப்பை முடித்துக் கொடுக்க ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 5 ஆண்டுகளில் இதுபோல 5 ஆயிரம் நபர்களுக்கு மேல் ஆய்வு அறிக்கையை வாங்கிக்கொண்டு வைவா உள்பட பல்வேறு முக்கியமான விவகாரங்களில் எந்தவித சிக்கலுமின்றி முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.200 கோடி வரை ஊழல்
இந்த முறைகேட்டிலும் ரூ.200 கோடி வரை மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. முனைவர் படிப்பிற்கான சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்திதான் தேர்வு செய்து வழக்கம். அப்படி நடக்கும் நுழைவுத்தேர்வில் ராஜாராம் துணைவேந்தராக இருந்த காலத்தில் நூற்றுக்கு 60 மதிப்பெண்ணிலிருந்து 30 எடுத்தால் போதும் என விதியை தளர்த்தி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

மோசடிகளால் அதிர்வலை
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ள இந்த மோசடிகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விடைத்தாள் மறுமதிப்பீட்டில் நடைபெற்ற முறைகேடுகள் பீதியை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது பிஹெச்டி துறையிலும் மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. நாள்தோறும் கிளம்பும் மோசடி புகார்களால் இன்னும் எந்தெந்த துறைகளின் பெயர்கள் அடிபடபோகிறதோ என்ற பீதி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications