துரத்திய பெற்றோர்.. பஸ் சத்தமே கெட்டி மேளம்.. நடு ரோட்டில் கல்யாணம் செய்த ஜோடி!
தஞ்சாவூர்: பெற்றோர்கள் விடாமல் துரத்த பேருந்து சத்தத்தை கெட்டி மேளமாக்கி நடுரோட்டில் தனது காதலிக்குத் தாலி கட்டியுள்ளார் ஒரு கணவர்.
ஊட்டியை சேர்ந்தவர் ரம்யா. அதேபகுதியை சேர்ந்தவர் மகேஷ் (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது). இவர்கள் அங்குள்ள தனியார் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்து வந்தனர். இருவருக்கும் இடையேயான நட்பு நாளடைவில் காதலாக மாறியது.
இவர்களின் காதல் விவகாரம் ரம்யாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் கண்டித்தனர். ஆனாலும் பெற்றோருக்கு தெரியாமல் ரம்யா தனது காதலை தொடர்ந்தார். இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மகேஷ் ரம்யா ஜோடியை பெற்றோர் கண்டித்தனர். ஆனால் காதல் தொடர்ந்தது. எனவே ரம்யாவை ஊரை விட்டு கடத்தி உறவினர் வீட்டில் தங்கவைக்க முடிவு செய்தனர். அதன்படி தஞ்சையில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைக்கப்பட்டார் ரம்யா. இந்த தகவல் மகேசுக்கு தெரிய வந்தது. அவர் தஞ்சை வந்தார்.
ரம்யா தங்கியிருந்த வைக்கப்பட்டிருந்த உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கு யாரும் இல்லாத நேரத்தில் காதலியை அழைத்துக்கொண்டு ஊருக்கு செல்ல தஞ்சை புதிய பஸ்நிலையம் வந்தார். நேற்று இரவு 8.00 மணி அளவில் அவர்கள் புதிய பஸ்நிலையத்தின் வெளிப்புற பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ரம்யாவின் உறவினர்கள் அவரை தேடி பஸ்நிலையம் வந்தனர். ரம்யா தனது காதலனுடன் செல்வதை பார்த்து பிடிக்க முயன்றனர். இதனால் மகேஷ் அதிர்ச்சி அடைந்தார். அவர் திடீரென தனது காதலி கழுத்தில் தாலி கட்டினார்.
நடுரோட்டில் இந்த சம்பவம் நடைபெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்து நிலையத்துக்கு வந்த பயணிகளும், பொதுமக்களும், ஆட்டோ டிரைவர்களும் அங்கு திரண்டனர். இதனால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அப்போது அங்கு வந்த தஞ்சை மருத்துவ கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் காதல்ஜோடியை மீட்டு ஜீப்பில் ஏற்றி தஞ்சை மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். இன்ஸ்பெக்டர் சந்திரா காதல் ஜோடியினரிடம் விசாரணை நடத்தினார். இருவரும் மேஜர் என்பதால் அவர்களது பெற்றோரை அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
சினிமா பாணியில் நடைபெற்ற இந்த திருமணம் தஞ்சாவூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.