தேர்தல் நாளில் மழை பெய்யுமாம்! ஓட்டு போட குடையோட போங்க!!
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் தேர்தல் நாளான 16ம் தேதி மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இலங்கை அருகே தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்று அழுத்த தாழ்வு நிலை தாழ்வு பகுதியாக மாறி 16ந் தேதிக்குள் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
15 மற்றும் 16ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 2 மாதங்களாகவே வெயில் கொளுத்தி வருகிறது. கடந்த 4ம் தேதி முதல் அக்னி நட்சத்திர காலம் தொடங்கியதால் வெப்பத்தின் தாக்கம் தீவிரமடைந்தது. சில மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. கோடை மழையின் காரணமாக, கத்திரி வெயில் காலத்திலும் பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், தென் மாவட்டங்களில் மழை பெய்தாலும், வேலூரில் 107 டிகிரி வெயில் கொளுத்தியது. தருமபுரி, மதுரை, திருச்சியில் 102 டிகிரி வெப்பநிலையும், சென்னை, சேலம் நகரங்களில் 101 வெப்பநிலையும், கடலூர், திருப்பத்தூரில் 100 வெப்பநிலையும் பதிவானதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இலங்கை அருகே தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, கடல் பரப்பில் சுமார் 4.5 கி.மீ. தொலைவுக்கு பரவியுள்ளதாக கூறினார்.
இந்த தாழ்வு நிலையானது அடுத்த 2 நாட்களில் தாழ்வு மண்டலமாக உருவாகும். இதனால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.
24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் கூறிய பாலச்சந்திரன், காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மே 16ம் தேதி தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்தார். நேற்று அதிகபட்சமாக குமரி தக்கலை, ஆண்டிபட்டியில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் பாலச்சந்திரன் கூறினார்.
மே 16ம் தேதி மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளதால் குடையோட போங்க வாக்காளர்களே!