குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... வடதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை மையம்
சென்னை: குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதால், வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கோடை முடிந்த பின்னரும் கடந்த வாரம் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து வெயில் சுட்டெரிந்து வந்தது. இந்நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை ஆந்திர கடலோர பகுதிகளில் தீவிரம் அடைந்து வருக்கிறது.
மேலும் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதால், குளுமையான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்திலும் வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் வடக்கு ஆந்திர கடற்கரைக்கு அப்பால், நேற்று (நேற்று முன்தினம்) உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. இதன் காரணமாக, அடுத்து வரும் 2 நாட்களுக்கு வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை தமிழகத்தில் 19 செ.மீ. மழை பெய்து இருக்க வேண்டும். ஆனால் தற்போது வரை 17.9 செ.மீ. மழை அளவுதான் பதிவாகி இருக்கிறது. இது இயல்பு அளவை விட 6 சதவீதம் குறைவு ஆகும்.
இன்று (நேற்று) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
காரைக்குடி, சேத்தியாத்தோப்பு ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ., காரைக்கால் 6 செ.மீ., திருவிடைமருதூர் 5 செ.மீ., சேலம், கொடுமுடி, பரமத்திவேலூர், வாழப்பாடி, தேவக்கோட்டை, திருக்கோவிலூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், நத்தம், மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ., சென்னை மீனம்பாக்கத்தில் 1 செ.மீ. மழை பெய்துள்ளது" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.