ஓட்டுக்கு நோட்டு: கணஜோராக நடக்கும் பண பட்டுவாடா... ஆங்காங்கே சிலர் மட்டும் கைது!
சென்னை: தேர்தல் ஆணையம் என்னதான் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு கண்காணித்தாலும் ஒட்டுக்கு நோட்டுக்கு கொடுப்பது மட்டும் நின்ற பாடில்லை.
வாக்களிக்க பணம் வாங்கவேண்டாம்... வாக்கினை விற்பனை செய்யவேண்டாம் என்று தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தாலும், கொடுக்கும் காசை ஏன் வேண்டாம் என்று சொல்ல வேண்டும் என்று வாங்கிக் கொள்கின்றனர் வாக்காளர்கள்.
கவரில் காசு போட்டு கொடுப்பது பழையமுறை... இப்போது புதுப்புது டெக்னிக்குகளை கையாண்டு தேர்தல் ஆணையம், காவல்துறையினரின் கண்ணில் மண்ணைத்தூவிவிட்டு பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர்.

பூத் ஸ்லிப் காட்டுங்க
கட்சிக்காரர்களிடம் கொடுக்கப்பட்ட பணம், முறையாக விநியோகம் செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் தொகுதிகளில் வீடு வீடாக செல்லும் அதிமுகவினர், பூத் ஸ்லிப் காட்டினால் பணப்பட்டுவாடா செய்கின்றனர். ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் வரை கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் ரவுண்ட் முடிஞ்சது
அதிமுகவினர் முதல் ரவுண்ட் முடித்துவிட்டனர். இன்றைய தினம் அதே பகுதிகளில் திமுகவினர் பணம் பட்டுவாடா செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கதவை தட்ட முடியலையே
கதவை தட்டினாலேயே பூத் ஸ்லிப் காட்டுகின்றனர் வாக்காளர்கள். நான் கல்யாண பத்திரிக்கை வைக்க வந்திருக்கேன் என்று கூறிய பின்னர் சிரிக்கின்றனர் உள்ளூர்வாசிகள்.

அதிமுகவினர் வீட்டில் பறிமுதல்
சென்னை ஏழுகிணறு பகுதியில் உள்ள வால்டாக்ஸ் சாலையில், அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக திமுக அளித்த புகாரின் பேரில், தேர்தல் அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர். அப்போது, 43-வது வார்டில், அதிமுகவின் துணை வட்டச் செயலாளர் ஏ.எஸ். மணியின் வீட்டில் 12 ஆயிரத்து 200 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து, அவரை பிடித்துச் சென்ற காவல்துறையினர், ஏழுகிணறு காவல்நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திமுகவினர் முற்றுகை
அதிமுகவினர் மீது கொடுக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் தயங்குவதாகக் கூறி திமுகவினர் அந்த காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும், தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

அதிமுகவினர் கைது
திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கத்தில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுவதாக தேர்தல் பறக்கும் படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் அங்கு நடத்திய சோதனையில் வாக்காளர்களுக்குத் தலா 500 ரூபாய் பணம் கொடுத்துக் கொண்டிருந்த துரைசாமி, ஏழுமலை ஆகியோரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் அதிமுக.,வை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

சிக்கிய அதிமுக கவுன்சிலர்
திருவண்ணாமலை அருகே கீழ்மலைப் பகுதியில் உள்ள கேசிபட்டி கிராமத்தில் உள்ள வாக்காளர்களுக்கு அதிமுக-வினர் வீடு வீடாக பணப்பட்டுவாடா செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அக்கிராமத்தை சேர்ந்த 1-வது வார்டு அதிமுக செயலாளர் பழனிச்சாமி வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் காபி கொட்டை மூட்டையில் பதுக்கி வைத்திருந்த ரூ.65 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.

அதிமுக துண்டு
இதே போல் தர்மபுரியில் இருந்து மேட்டுருக்கு வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் மதிப்புள்ள 8 ஆயிரம் அதிமுக கரை போட்ட துண்டுகளை அதிகாரிகள் கைப்பற்றினர். தீவப்பட்டி சோதனைச்சாவடியில் சிக்கிய இந்த துண்டுகள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது பற்றி ஆட்டோ ஓட்டுநர் கண்ணனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திமுகவினர் பணப்பட்டுவாடா
சென்னை ராயப்பேட்டை திவான்சாகிப் தெரு,ராமசாமி தோட்டம், புதுப்பேட்டை கார்டன்,பிரசன்ன விநாயகர் கோயில் தெரு ஆகியப் பகுதிகளில் திமுகவைச் சேர்ந்த சிலர் வாக்காளர்களுக்கு டிபன் பாக்ஸில் வைத்து பணம் கொடுப்பதாக ராயப்பேட்டை 118-வது அதிமுக தேர்தல் பணிக்குழுவினருக்கு தகவல் கிடைத்து அவர்கள் தேர்தல் பிரிவு பறக்கும் படை அதிகாரிகளுக்கு புகார் செய்தார்.

ஆனா சிக்கலையே
அந்த புகாரின் அடிப்படையில் பறக்கும்படை அதிகாரிகளும், போலீசாரும் அந்தப் பகுதிக்குச் சென்று குறிப்பிட்ட இடங்களில் சோதனை செய்தனர். அப்போது அவர்களுடன் அதிமுக நிர்வாகிகளும் இருந்தனராம். ஆனால் அங்கு வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டதற்கான எந்த ஆதாரமோ, தடயமோ கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகளும், போலீஸாரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

அடிதடி காயம்
இதற்கிடையே இத் தகவலறிந்து அந்தப் பகுதியில் திமுகவினர் குவிந்தனர். போலீசாரும், அதிகாரிகளும் புறப்பட்டுச் சென்றதும், திமுகவினர், அதிமுகவினரிடம் வாய்த் தகராறு செய்ததாக தெரிகிறது. வாய் தகராறு முற்றவே திமுகவினர் அங்கு கிடந்த கம்பு மற்று கற்களால், அதிமுவினரை தாக்கினராம். இதனால் அதிமுவினரும், திமுகவினரை திருப்பி தாக்கியதாக கூறப்படுகிறது.இந்த மோதலில் அதிமுகவைச் சேர்ந்த பலர் காயமடைந்தனர். அவர்கள் தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.

காங்கிரஸ் பிரமுகர் கைது
புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் நாரயணசாமிக்கு வாக்களிக்க கோரி காரைக்காலை அடுத்த நெடுங்காடு என்னும் இடத்தில் பணம் விநியோகம் செய்ததாக காங்கிரஸ் பிரமுகர் ரமேஷ் என்பவரை பறக்கும் படையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஓட்டு நமக்குத்தான்
கண்காணிப்பு இருந்தாலும் கமுக்கமாக 60 சதவிகிதம் வரை பணப்பட்டுவாடா நடைபெற்றுள்ளது. 40 தொகுதிகளிலும் வார்டுக்கு 16 பேர் வீதம் பொறுப்புக்களை ஒப்படைத்து இந்த பண பட்டுவாடா நடந்து வருகிறது. அதாவது 50 வாக்களர்களுக்கு 1 நபர் வீதம் நியமனம் செய்து பணம் வினியோகம் செய்யப்பட்டு முடியும் தாருவாயில் உள்ளது.

யாரு மனசுல யாரு
தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் தீவிரமாக இல்லை என்றும் ஆளும் தரப்புக்கு ஆதரவாக இருப்பதாகவும் திமுக தரப்பும் பாமகவும் மதிமுகவும் குற்றம் சாட்டுகின்றன.
கொடுத்த பணத்தை வாங்கி வைத்துக் கொண்ட வாக்காளர்கள் கடைசி நேரத்தில் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.












Click it and Unblock the Notifications