நடராஜன் என்னை அடையாளம் கண்டுகொண்டார்... வைரமுத்து நெகிழ்ச்சி!
சென்னை : மார்பில் தீவிர தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் கணவர் நடராஜனை கவிஞர் வைரமுத்து நேரில் சந்தித்துள்ளார். அவர் தன்னை அடையாளம் கண்டுகொண்டதாக வைரமுத்து கூறியுள்ளார்.
சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு, மார்பில் தீவிர தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், மார்ச் 16ல் சிகிச்சைக்காக சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு நடராஜன் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார்.

நடராஜனுக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டுள்ளது, அவரது உடல் நிலை, கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் நடராஜனை மருத்துவமனையில் கவிஞர் வைரமுத்து நேரில் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய வைரமுத்து கூறியதாவது : நான் வந்திருக்கிறேன் என்று மருத்துவர் சொன்னதும், அவர் கண் திறந்து பார்த்தார். என்னை அடையாளம் கண்டுகொண்டார்.
தன் வலது கையை 3 செ.மீட்டர் உயர்த்தினார். தன்னை தொடச்சொல்லி அவர் எனக்கு சமிக்ஞை காட்டினார். அவர் கையை பிடித்து நான் வைரமுத்து வந்திருக்கிறேன், விரைவில் குணமடைவீர்கள் என்று நம்பிக்கை கூறினேன். இதற்கிடையில் ஒரு புன்னகை ஓடி மறைந்தது, பின்னர் கண்களை மெல்ல இமை மூடிக்கொண்டார். அவர் விரைவில் நலமடைவார் என்ற நம்பிக்கை இருக்கிறது, நலமுற வேண்டும் என்ற நம்புகிறேன். நலம் பெறுவார் என்றும் வாழ்த்துகிறேன்.
எல்லா மருத்துவர்களையும் நான் சந்திக்கவில்லை, ஒரு மருத்துவர் எனக்கு வழிகாட்டினார். நல்ல சிகிச்சை அவருக்கு வழங்கப்படுகிறது, நேற்றை விட படிப்படியான முன்னேற்றம் அவரது உடல்நிலையில் தெரிவதாக மருத்துவர்கள் நம்பிக்கை கூறினர். புதிய முறையில் மருத்துவம் செய்யப்படுகிறது, மருந்துகள் மூச்சுக்கருவியின் உதவியும் நடராஜனுக்கு தேவைப்படுகிறது. மெல்ல மெல்ல அவரது உடல்நிலையில் முன்னேற்றமும் காணப்படுகிறது என்றும் வைரமுத்து தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications