தமிழகத்தில் மோடியின் பினாமி ஆட்சி நடைபெறுகிறது… மு க ஸ்டாலின் அதிரடி
தமிழகத்தில் நடப்பது பாஜக பினாமி ஆட்சிதான் என்பதை இனி தொடர்ந்து சொல்வேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாகக் கூறினார்.
சென்னை: தமிழகத்தில் பாஜக ஆட்சிதான் அதிமுக பெயரில் நடந்து கொண்டிருக்கிறது என்று சென்னை மயிலை மாங்கொல்லையில் நடந்த அனைத்து கட்சிகளும் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறினார்.
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை திமுக கூட்டியது. அதில் வரும் 25ம் தேதி முழு அடைப்பு நடத்த முடிவு எடுக்கப்பட்டது. அந்த போராட்டத்திற்கான விளக்கப் பொதுக் கூட்டம் சென்னை மயிலை மாங்கொல்லையில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் திராவிடர் கழகம் உள்ளிட்ட சமூக நீதி இயக்கங்களும் பங்கேற்றுள்ளன.
விவசாயக் கூட்டணி
இந்தக் கூட்டத்தில் மு. க. ஸ்டாலின் பேசியதாவது: இந்தக் கூட்டணி விவசாயிகளுக்கான கூட்டணி. தேர்தலுக்கான கூட்டணி அல்ல. பலரும் இது தேர்தலுக்கான கூட்டணி என்கிறார்கள். இது விவசாய மக்களுக்கான கூட்டணி.
தடுப்பணை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் டெல்டா பகுதி பாதிப்படைந்துள்ளது. இதே போன்று கொங்கு மண்டலம் பாதிக்கப்பட்டுள்ளது. பாலாற்றில் தடுப்பணை கட்டுவதால் வடக்கு மண்டலம் பாதிப்படைந்துள்ளது.
விவசாயக் கடன்
அதே போன்று ஜுன் மாதத்தில் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. இறுதித் தீர்ப்பின் படி காவிரி நீர் பெற முடியவில்லை. விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யவில்லை. வர்தா புயலுக்கான நிவாரணம் வழங்கப்படவில்லை.
யாருக்கு பொறுப்பு?
இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் நடவடிக்கை எடுக்கப்போவது யார்? மத்திய மற்றும் மாநில அரசுதான் இதனை செய்ய வேண்டும். ஆனால், ஆட்சியில் எப்படி ஒட்டிக் கொண்டிருப்பது என்பது பற்றிதான் அதிமுகவின் கவலையாக இருக்கிறது.
மோடியின் பினாமி
தமிழகத்தில் பாஜகவின் பினாமி அரசுதான் நடந்து கொண்டிருக்கிறது என்று இனி கூறுவேன். குறிப்பாக மோடியின் பினாமி ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் ஆர்.கே நகர் தொகுதியில் நடைபெற இருந்த தேர்தல் நிறுத்தப்பட்டது.
நீட் தேர்வு
ஏழைய எளிய மாணவர்களின் நாடிப் பிரச்சனையான நீட் தேர்வு விலக்கில் திமுக போராடியது. இது சம்பந்தமாக டெல்லிக்கு சென்று பிரதமர், ஜனாதிபதியை சந்தித்து அமைச்சர்கள் பேசி இருக்கிறார்களா?
சிவப்பு விளக்கு
காரில் இருந்து சிவப்பு விளக்கை கழட்டி விட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். அதனை அவரே கழற்றினார். மோடி சொல்லிவிட்டதால் சிவப்பு விளக்கை கழட்டி விட்டதாக முதல்வர் கூறினார். விவசாய நிவாரண நிதியை மோடியிடம் வலியுறுத்தும் ஆண்மை எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏன் இல்லை என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.