ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தேர்தல் அதிகாரியை மாற்ற ஸ்டாலின் கோரிக்கை
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டுமானால் தேர்தல் அதிகாரியை உடனடியாக மாற்ற வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டுமானால் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை மாற்ற வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ல்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இருந்தன. இந்நிலையில் இந்த தேர்தலில் தீபாவும் , நடிகர் விஷாலும் போட்டியிடுவதாக அறிவித்து நேற்று முன்தினம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேற்றைய தினம் வேட்புமனுக்களை பரிசீலனை செய்தனர். அப்போது தீபா மற்றும் விஷாலின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இது தொடர்பாக விஷால் சாலை மறியல் ஈடுபட்டும் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் வேண்டுகோள் விடுத்ததும் அவரது வேட்புமனுவை ஏற்பதாக அறிவித்தார்.
பெரும் சர்ச்சை
ஆனால் விஷால் வீடு சென்றவுடன் அவரது வேட்புமனுவை மீண்டும் நிராகரித்தார் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி. இதை கண்டித்து ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் விஷால் புகார் அளித்துள்ளார். இது பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை மாற்றம் செய்யலாமா என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிரூபணம் ஆகிறது
இதுகுறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில், ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி நடந்து கொள்வதை பார்க்கும் போது ஆளுங்கட்சிக்கு சாதகமாக உள்ளார் என்பது நிரூபணம் ஆகிறது.
மனு நிராகரிக்கப்பட்டது
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டுமானால் தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும். விஷால் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தோழமை கட்சிகள் பங்கேற்பு
இந்த குதிரை பேர ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். வரும் 11-ஆம் தேதி திமுக சார்பில் பொதுக் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் தோழமை கட்சிகள் கலந்து கொள்கின்றன என்றார் அவர். எனினும் விஷால் வேட்புமனு நிராகரிப்பு குறித்து எந்த கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை.