ராம மோகன ராவ்தான் இன்னும் தலைமைச் செயலாளராமே.. உண்மையா முதல்வரே? கேட்கிறார் ஸ்டாலின்
ராமமோகனராவ் கூறியதை போல அவர்தான் இன்னும் தலைமைச் செயலாளரா என்பதை முதல்வர் பன்னீர்செல்வம் தெளிவுபடுத்த வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: ராம மோகன ராவ் குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை, கோபாலபுரம் இல்லத்தில் நிருபர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் மேலும் கூறியதாவது: முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் இன்று அளித்த பேட்டியில், நான்தான் இப்போதும் தலைமைச் செயலர் என்கிறார். இதுகுறித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்தான் பதில் அளிக்க வேண்டும்.
தலைமைச் செயலகத்தில் மத்திய வருமான வரித்துறை சோதனை நடத்தியபோதே, இதில் ஏதோ பெரிய மர்மம் உள்ளது என்று நான் கூறியிருந்தேன். எனவே இதுகுறித்து பன்னீர்செல்வம் விளக்கம் அளிக்க நான் கேட்டுக்கொண்டேன். இப்போதும் அதையேதான் வலியுறுத்துகிறேன்.
மேலும் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதுதான், பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி கேட்பதில்லை. இப்போது முதல்வர் பன்னீர் செல்வம் தலைமைச் செயலகத்திற்கு தினசரி வருகிறார். அவரிடமாவது நீங்கள் (பத்திரிகையாளர்கள்) கேள்வியை கேட்டு நாட்டு மக்களுக்கு இத்தகவல்களை தெரிவித்தால், நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
மேலும், வருமான வரித்துறை என்பது மத்திய அரசின்கீழ் செயல்படும் அமைப்பு என்றபோதிலும், அதற்கு தனி அதிகாரிகள் தனி உரிமைகள் உள்ளன. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.