பெரும் பணம், இளம் பெண்ணுடன் தலைமறைவாகிவிட்டாரா மதன்?
சென்னை: பெரும் பணம் மற்றும் தனது இளம் காதலியுடன் வேந்தர் மூவீஸ் மதன் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
எஸ்ஆர்எம் பச்சைமுத்துவிடம் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக,கங்கையில் சமாதியாகப் போவதாக தற்கொலைக் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமாகிவிட்டார் மதன்.
இவரைத் தேடி தயாரிப்பாளர் டி சிவா தலைமையில் காசிக்கு ஒரு குழுவே பயணமானது. காசி போலீஸ் உதவியுடன் கங்கையில் தேடியும் மதன் கிடைக்கவில்லை. ஆனால் அவர் தங்கியிருந்த ஹோட்டல் ரூம், பெட்டி போன்றவற்றைக் கண்டுபிடித்துவிட்டதாக கூறினார் சிவா.
உண்மையில் மதன் எங்கே போனார்? அவர் கங்கையில் முழுகிவிட்டாரா? என்றெல்லாம் பல கேள்விகள்.
மதன் கிளம்பிப் போன 3 நாட்களுக்குப் பிறகு அவரைப் பற்றி ஏகப்பட்ட செய்திகள்.
எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தில் மருத்துவப் படிப்புக்கு அட்மிஷன் வாங்கித் தருவதாக 50-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் தலா ரூ 60 லட்சம் வீதம் மதன் பணம் வசூலித்ததாகவும், அந்தப் பணத்துடன் அவர் தலைமறைவாகிவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் அவருக்கும் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவிக்கும் நெருங்கிய தொடர்பிருந்ததாகவும், அந்த மாணவியுடன் இப்போது அவர் தலைமறைவாகிவிட்டதாகவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
மதனும் அந்தப் பெண்ணும் கடந்த ஒரு ஆண்டாக ஒன்றாகவே வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பணம், திரைப்படத் தயாரிப்பாளர்கள், பைனான்சியர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் கடனாகப் பெற்ற பணம் என பெரும் பணத்துடனும் காதலியுடனும் அவர் தலைமறைவாகியிருக்கலாம் என்று வேந்தர் மூவீஸ் வட்டத்திலேயே தகவல் கசிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.