ஒய்யாரமாக நடந்து வருவது கல்விக்கு உதவுமா.? தமிழக கல்லூரிகளில் அழகி போட்டிக்கு தடை: ஹைகோர்ட்
சென்னை: பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆணழகன், அழகி போட்டி நடத்துவதற்கு தடை விதித்து உடனடியாக சுற்றறிக்கை வெளியிடும்படி தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை, அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்தவர் லட்சுமி சுரேஷ். இவர், சென்னை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

எனது மகள் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினீயரிங் படித்து வருகிறார். கடந்த 2013ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தின், மத்திய பொறியியல் கல்லூரியின் மாணவர்கள் சங்கம் சார்பில் ‘டெக்கோபெஸ்' என்ற தலைப்பில் கலாசார நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், நடைபெறும் அழகி போட்டியில் வெற்றி பெறும் மாணவிக்கு மோட்டார் சைக்கிள், செல்போன், ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவை பரிசாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.
சிறுவயது முதலே பல்வேறு போட்டிகளில் என் மகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வெற்றி பெற்று வந்தார். அதனால், இந்த கலாசார நிகழ்ச்சியிலும் என் மகள் கலந்து கொண்டு, அழகி போட்டியில் முதல் பரிசு பெற்றார்.
ஆனால், அவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதே தவிர, அறிவித்ததுபோல் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் வழங்கப்படவில்லை. மேலும், என் மகளுக்கு வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழும் போலியாக இருக்கலாம் என்று தெரிகிறது.
இதனால், என் மகள் மன உளைச்சலுக்கு ஆளானார். எனவே, என் மகளுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அண்ணா பல்கலைக்கழகத்தின் டீன் எம்.சேகர், மத்திய இன்ஜினீயரிங் கல்லூரியின் மாணவர் மற்றும் கலைச்சங்கத்தின் தலைவர் விக்னேஷ், ‘டெக்கோபெஸ்' நிகழ்ச்சியின் பொறுப்பாளர் சுதர்சன், ஒருங்கிணைப்பாளர் என்.பிரபாகரன் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:
குறிப்பிட்ட இந்த கலாசார நிகழ்ச்சி, அண்ணா பல்கலைக்கழகத்தின் சின்னத்துடன் இணைய தளத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த நிகழ்ச்சி பல்கலைக்கழகத்தின் ஒப்புதலுடன் நடத்தப்பட்டதா? என்ற கேள்வி எழுந்ததுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆஜரான வக்கீல், இந்த நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகம் ஒப்புதல் எதுவும் அளிக்கவில்லை என்று கூறினார். ஆனால், பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளதால், பல்கலைக்கழகம் தரப்பில் கூறப்படும் பதிலை ஏற்க முடியாது.
இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்தபின்னர்தான் மனுதாரரின் மகளுக்கு இழப்பீடு வழங்குவது உள்ளிட்டவைகள் குறித்து இந்த ஹைகோர்ட்டு இறுதி முடிவு எடுக்கும்.
கலாசார நிகழ்ச்சி என்பது மாணவ, மாணவியர்களின் திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாக இருக்க வேண்டும். பலர் முன்னால் ஒய்யாரமாக நடந்து காட்டுவதால், இன்ஜினீயரிங் படிக்கும் மாணவிகளுக்கு என்ன பயன் ஏற்படப் போகிறது என்பது எனக்கு புரியவில்லை. இந்த விரும்பத்தகாத சம்பவத்தை உடனடியாக தடுத்து நிறுத்த, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டியதுள்ளது.
எனவே, தமிழக உயர்க் கல்வித்துறை செயலர், தொழிற்கல்வி ஆணையர், கல்லூரி கல்வி இயக்குனர் ஆகியோர் அனைத்து பல்கலைக்கழகம், கல்லூரிகளுக்கு உடனடியாக சுற்றறிக்கை அனுப்பி, மாணவர்கள் மத்தியில் ஆணழகன், அழகி போட்டி நடத்தக்கூடாது என்று உத்தரவிட வேண்டும். இந்த நிகழ்ச்சிகளை கல்வி நிலையங்களில் நடத்த தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கை வருகிற 20-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications