சுவாதி கொலை வழக்கில் தீவிரமடைகிறது விசாரணை- கொலையாளியின் தெளிவான படம் சிக்கியது
சென்னை: சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க உயர்நீதிமன்றம் அளித்த 2 நாள் கெடு முடிவடைந்து விட்டது எனினும் கொலையாளியை இன்னும் நெருங்கவில்லை போலீஸ். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தெளிவாக இல்லாததால் வரைபடத்தை வரைந்து கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர். குற்றவாளியின் புதிய வரைபடத்தை வெளியிடவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்
சுவாதியின் வீட்டு அருகிலேயே கொலையாளி இருந்திருப்பது செல்போன் சிக்னல் மூலம் தெரியவந்துள்ளதை அடுத்து சூளைமேடு பகுதியை சல்லடை போட்டு தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

சுவாதி வீட்டை சுற்றியுள்ள கேமரா பதிவுகளிலும், கொலையாளியின் படங்கள் கிடைத்துள்ளன. சிசிடிவி கேமராவில் கிடைத்த தெளிவற்ற படங்களுடன், ஹைதராபாத் சென்ற போலீசார், அங்குள்ள மையம் ஒன்றில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், கொலையாளி படத்தை, தெளிவாக வரைந்துள்ளனர். அந்த படத்துடன் சென்னை திரும்பிய போலீசார் அதை புகைப்படமாக வெளியிட்டு, அடையாளம் காண முயற்சிகள் நடந்து வருகின்றன.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ம் தேதி சுவாதியை மர்ம நபர் ஒருவர் வெட்டி கொலை செய்தார். இந்த சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
சுவாதியின் நண்பரிடம் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் தெரியவந்துள்ளன. இருவரும் ஒரே கல்லூரியில் படித்ததாக கூறிய அந்த நபர் திருவல்லிக்கேணியை சேர்ந்தவர்.
கடந்த 18ம் தேதியன்று சுவாதி, அவரது நண்பரிடம் செல்போனில் பேசி, மர்மநபர் ஒருவன் பின் தொடர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். கடந்த 10, 11ம் தேதியன்று அந்த நபர் தொடர்ச்சியாக பின்தொடர்ந்து வந்ததாகவும் அவனை என்ன செய்வது என்று தெரியவில்லை என்றும் நண்பரிடம் சுவாதி கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அந்த பிரச்சினையை மறந்துவிட்டதாகவும், சுவாதியை பின்தொடர்ந்த மர்மநபர் இந்த அளவுக்கு கொடூரமாக கொலை செய்வான் என்று தான் நினைக்கவில்லை என்றும் சுவாதியின் நண்பர் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தனிப்படை போலீசார் கொலையாளியை கண்டுபிடித்து கைதுசெய்யும் முயற்சியில் இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர்.
சுவாதியை கொலை செய்து விட்டு, அந்த நபர் சூளைமேட்டுக்கு சென்றிருப்பது உறுதி செய்யப்பட் டுள்ளது. எனவே சுவாதியை கொலை செய்தவர் சூளைமேட்டில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சூளை மேட்டில் உள்ள வீடுகள், தங்கும் விடுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் கடந்த 4 நாட்களாக போலீஸார் சோதனை செய்து வருகின்றனர்.
சூளைமேடு நெடுஞ்சாலையில் அந்த நபர் இரண்டுமுறை நடந்து சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதேபோல டீக்கடையில் நின்று சுவாதியை நோட்டம் விட்டதும் ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதனடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே சுவாதி கொலை வழக்கில், குற்றவாளியை கண்டுபிடிக்க உயர்நீதிமன்றம் அளித்த கெடு முடிவடைந்த நிலையில், கொலைக்கான காரணத்தையும், கொலையாளியையும் கண்டுபிடிக்க முடியால் தடுமாறி வருகின்றனர் போலீசார். இந்த வழக்கு பற்றி உயர்நீதிமன்றத்தின் அடுத்த கட்ட உத்தரவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications