தேவர் ஜெயந்திக்கு டாக்ஸியில் போகத் தடை கூடாது என்று கோரிய மனு தள்ளுபடி!
சென்னை: பசும்பொன் கிராமத்தில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவுக்கு வாடகை வாகனங்களில் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதை நீக்க வேண்டும் என்று கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இதுதொடர்பாக தேசபக்தி தமிழர் முழக்கம் என்ற அமைப்பின் சார்பாக அதன் தலைவர் அறிவழகன் தாக்கல் செய்திருந்த மனுவில்,
சுதந்திர பேராட்ட வீரர் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. குருபூஜை, தேவர் ஜெயந்தி என்ற பெயரில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிக்கு தமிழகம் முழுவதும் இருந்தும் பொதுமக்கள் ஏராளமானோர் ராமநாதபுரம் மாவட்டம், பசுபொன் கிராமத்துக்கு வருகிறார்கள்.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், வாடகை வாகனங்களில் மாவட்டத்துக்குள் பொது மக்கள் வருவதற்கு தடை விதித்துள்ளன. எனவே, இந்த தடையை அகற்றவேண்டும்.
தேவர் ஜெயந்திக்கு பொதுமக்கள் பலர் வாடகை வாகனங்களில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து கடந்த 7-ந்தேதி ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, என் கோரிக்கையை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் சஞ்சய் காந்தி வாதிடுகையில், மனுதாரர் மனுவை ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. பரிசீலித்து மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து இன்று உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவு இமெயில் மூலம் மனுதாரருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதை ஏற்ற நீதிபதி, அறிவழகனின் மனுவை பைசல் செய்வதாக கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.