ரூ.1,06,000 கோடிகிரானைட் முறைகேடு: சகாயம் அறிக்கைக்கு விளக்கம் தர அரசுக்கு மேலும் 6 வாரம் அவகாசம்
சென்னை: கிரானைட் முறைகேடு வழக்கில் சகாயம் தாக்கல் செய்துள்ள அறிக்கைக்கு விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு 6 வார கால அவகாசம் அளித்துள்ள உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை பிப்ரவரி 15ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் சகாயம் குழு, மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடு குறித்து மட்டும் ஆய்வு செய்து, முதல்கட்டமாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. மதுரையில் ஆய்வு செய்த ஐஏஎஸ் சகாயம், கடந்த நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தார். அதன்படி, மதுரை மாவட்டத்தில் மட்டுமே 1,06,000 கோடி அளவுக்கு கிரானைட் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை செய்ய தனி நீதிமன்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தார். அரசு அதிகாரிகளின் துணையில்லாமல் இந்த முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்பதால், அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டுமென அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக , தமிழக அரசு அறிக்கையை ஆய்வு செய்து பதிலளிக்க கால அவகாசம் வழங்கி வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்து. இந்நிலையில் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுன், நீதிபதி புஷ்பா சத்யநாராயணனா ஆகியோர் முன்னிலையில் இன்று வழக்கு விசராணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான, அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமயாஜி, அறிக்கையை ஆய்வு செய்து வருவதாகவும், விரிவான விளக்கமளிக்க மேலும் 4 வார கால அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தார். அதையேற்ற நீதிபதிகள் தமிழக அரசுக்கு 6 வார கால அவகாசம் அளித்ததோடு, வழக்கு விசாரணையை பிப்ரவரி 15ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.