மவுலிவாக்க கட்டட விபத்து: மு.க.ஸ்டாலின் வழக்கில் தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி
சென்னை: மவுலிவாக்க கட்டட விபத்து குறித்த விசாரணை அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்யாதது ஏன்? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த இரண்டு 11 மாடி அடுக்கு குடியிருப்பு கட்டடத்தில் ஒன்று இடிந்து விழுந்தது. கடந்த ஆண்டு ஜூன் 28-ந் தேதி நிகழ்ந்த இந்த சம்பவத்தில் 61 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மீட்கப்பட்டனர்.
இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தியது. அந்த விசாரணை அறிக்கை கடந்த ஆண்டு முதல்வர் ஜெயலலிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் மவுலிவாக்கம் கட்டட விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தபோது, ரகுபதி ஆணையத்தின் விசாரணை குறித்து ஸ்டாலின் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் மூர்த்தி, அந்த அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்துவிட்டு, பின்னர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாக கூறினார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜூன் மாதம் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடந்தது. அப்போது மவுலிவாக்கம் கட்டட விபத்து பற்றிய அறிக்கையை இதுவரை சட்டசபையில் தாக்கல் செய்யாதது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர் சோமையாஜி, அரசிடம் விளக்கம் கேட்டு தெரிவிப்பதாகக் கூறினார். இதையடுத்து இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூலை 14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.