கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான லுக் அவுட் சுற்றறிக்கைக்கு ஹைகோர்ட் இடைக்கால தடை
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான சிபிஐ-ன் லுக் அவுட் சுற்றறிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு கார்த்தி சிதம்பரம் அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லாத சான்றிதழ் பெற்றுத்தருவதாக கூறி, மொரிஷியசில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும், கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர். அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கின் காரணமாக கார்த்தி சிதம்பரத்தை, பாஸ்போர்ட் சட்டத்தின்படி மத்திய உள்துறை அமைச்சகம் 'தேடப்படும் நபராக' அறிவித்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுபற்றி, நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும், துறைமுகங்களுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டது.
எனினும், தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டது சட்டத்திற்கு புறம்பானது எனக் கூறி, கார்த்தி சிதம்பரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தேடப்படும் நபர் என்ற உத்தரவுக்கு, தடை விதித்துள்ளது.
தொழில் நிமித்தமாக அவ்வப்போது வெளிநாட்டுக்குச் சென்று வருவது பற்றி, சிபிஐக்கு முறைப்படி தகவல் சொல்லியிருந்தாலும், வேண்டுமென்றே இந்த தேடுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக, கார்த்தி சிதம்பரம் தனது மனுவில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.