இந்தியாவிலேயே முதல் முறையாக வழக்கு விசாரணையை நேரடியாக ஒளிபரப்பிய சென்னை ஹைகோர்ட்
சென்னை: இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக நீதிமன்ற நடவடிக்கையொன்று தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த பெருமை மெட்ராஸ் ஹைகோர்ட்டுக்கு சேர்ந்துள்ளது.
தமிழகத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மதுரையில் வக்கீல்கள் போராட்டம் நடத்தினர். ஹெல்மெட்டுகளை ரோட்டில் போட்டு உடைத்தும் போராடினர்.

இதை ஊடகங்கள் வாயிலாக அறிந்த மெட்ராஸ் ஹைகோர்ட் தானாக முன்வந்து, வழக்கறிஞர்கள் மீது வழக்கு தாக்கல் செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக, மதுரை வழக்கறிஞர் சங்க தலைவர் தர்மராஜாவை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி ஹைகோர்ட் உத்தரவிட்டது. அவர் இன்று கோர்ட்டில் ஆஜரானார்.
வழக்கு விசாரணையை, நீதிபதிகள், தமிழ்வாணன் மற்றும் சி.டி.செல்வம் ஆகியோர் நடத்தினர். வழக்கறிஞர் சண்முக வேலாயுதம் அரசு தரப்பில் ஆஜரானார்.

இந்த வழக்கு விசாரணையை கோர்ட் வளாகத்தில் ஆங்காங்கு டிவிகளை பொருத்தி நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வழக்கமாக கோர்ட் ஹாலுக்குள் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க அனுமதி கிடையாது. செல்போனில் யாராவது பேசினால்கூட போனையும் பறிக்க உத்தரவிடும் அதிகாரம் நீதிபதிக்கு உண்டு.

ஆனால், இந்த வழக்கு வக்கீல்களுக்கு எதிரானது என்பதால், கோர்ட் வளாகத்தில் வக்கீல்கள் குவிவதை தடுக்க நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்ட காட்சிகளை, டிவி சேனல்கள் பலவும் நேரடியாக நேயர்களுக்கு காண்பித்தன. எனவே இது இந்திய வரலாற்றிலேயே ஒரு புது முயற்சியாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications