பக்ரீத் பண்டிகைக்கு ஒட்டகங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து வழக்கு... அரசு பரிசீலிக்க ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: பக்ரீத் பெருநாளை கொண்டாட இஸ்லாமியர்கள் தயாராகி வருகின்றனர். பொது இடத்தில் விலங்குகளை பலியிடக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள போதிலும், குர்பானி கொடுப்பதற்காக சென்னைக்கு ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இஸ்லாமிய நாட்காட்டியின் கடைசி மாதமான துல்ஹஜ் மாதத்தின் 10-வது நாளை, உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள் தியாகத் திருநாள் என்றழைக்கப்படும் பக்ரீத் பெருநாளாகக் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு வரும் 24-ம் தேதி பக்ரீத் பெருநாள் கொண்டாடப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக குர்பானி கொடுப்பதற்காக ராஜஸ்தானில் இருந்து ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
சென்னை வண்ணாரப்பேட்டையில் லாலாகுண்டா பகுதியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒட்டகங்களை அப்பகுதி சிறுவர்கள் பார்த்து மகிழ்கின்றனர். இதனிடையே பொது இடத்தில் விலங்குகள் பலியிடப்படுவதற்கு தடை விதிக்கக் கூறி, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குர்பானி ஒட்டகங்கள்
சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய கால்நடைகளுக்கான மக்கள் இயக்கத்தின் செயலாளர் அருண் பிரசன்னா உட்பட பலர் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர். அதில், ‘பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, சென்னைக்கு ஏராளமான ஒட்டகங்கள் விதிமுறைகளை மீறி கொண்டு வரப்படுகின்றன.

பொது இடத்தில் பலி
இந்த ஒட்டகங்கள், இறைச்சி கூடங்களில் வெட்டாமல், பொது இடத்தில் மக்கள் முன்னிலையில் வெட்டப்படுகிறது. இந்த நடவடிக்கை மிருகவதைச் சட்டத்துக்கு எதிராக உள்ளது. எனவே, சட்டவிரோதமாக ஒட்டகங்களை தமிழகத்துக்கு கொண்டு வருவதையும், அவற்றை வெட்டுவதையும் தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். ஒட்டகங்களை தமிழகத்தில் வெட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.

ஹைகோர்ட் உத்தரவு
இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரித்து கடந்த ஆகஸ்ட் 25ம்தேதி இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். அதில்.
இறைச்சிக்காக விலங்குகள் வெட்டப்படுவதற்கு என்று தனி இடம் உள்ளது. அப்படி இருக்கும்போது, பொதுஇடத்தில் ஒட்டகத்தை வெட்டுவதை எப்படி அதிகாரிகள் அனுமதிக்கின்றனர் என்பதை எங்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. இதன்மூலம் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், இந்த பிரச்சனை தொடர்பான சுமையை மற்றொரு அதிகாரியின் தலையில் வைத்து விட்டு, தாங்கள் தப்பித்துக் கொள்கின்றனர் என்பது தெரியவருகிறது.

சட்டவிரோதம்
மேலும், விலங்கு நல வாரிய செயலாளர் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் இறைச்சிக்காக வெட்டப்படும் விலங்குகளின் பட்டியலில் ஒட்டகத்தை சேர்க்கவில்லை. எனவே இறைச்சிக்காக ஒட்டகத்தை வெட்டுவது சட்டவிரோதம். எனவே விலங்குகள் வதைச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்' என்று கூறியுள்ளது.

இறைச்சிக்காக வெட்டுவதா?
எனவே இறைச்சிக்காக ஒட்டகங்கள் வெட்டுவதற்கு அனுமதிக்க கூடாது என்றும் கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டுவதை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்பதும் தெரியவருகிறது. எனவே, இதற்காக ஒரு குழுவை அமைக்க நாங்கள் முடிவு செய்கிறோம்.

குழு நியமனம்
கால்நடை வளர்ப்பு, சாலை போக்குவரத்து, சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், இந்திய விலங்கு நல வாரியம், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறை ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள், மனுதாரர் வக்கீல் சீனிவாசன் ஆகியோரை கொண்ட ஒரு குழுவை நியமிக்கின்றோம். இந்த குழு ஒரு வாரத்துக்குள் முதல் ஒருங்கிணைப்பு கூட்டத்தை நடத்தி, ஒட்டகம் வெட்டுவது தொடர்பாக பிரச்சனைகளை தீர்வு காண ஆலோசனைகளை நடத்தி முதல் கட்ட பரிந்துரைகளை இந்த உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பொது நல மனு தாக்கல்
இந்த நிலையில், ராதாராஜன் என்பவர் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில், ‘கடந்த 2008ம் ஆண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின்படி, இறைச்சிக்காக வெட்டப்படும் விலங்குகளின் பெயர் பட்டியலில் ஒட்டகம் இல்லை. ஆனால், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்துக்கு பல ஒட்டகங்கள் இறைச்சிக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. இதுகுறித்து மனு கொடுத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை' என்று கூறியிருந்தார்.

ஒட்டகங்கள் பலியிடல்
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த கோரிக்கைகளை, கடந்த மாதம் நியமித்த அதிகாரிகள் குழுவிடம் கொடுக்கவேண்டும். அவர்கள் இதுகுறித்து பரிசீலிக்கவேண்டும். அப்போது, முஸ்லிம் அமைப்புகளுக்காக ஆஜரான வக்கீல் விஜயேந்திரன், ‘புனித நூலில் ஒட்டகத்தை பலியிடுவதற்காக குறிப்புகள் உள்ளன' என்று கூறினார்.

மயில்களை வெட்ட முடியுமா?
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், ‘இந்த காரணத்தை கூறி மயில்களை வெட்டமுடியுமா?' என்று கேள்வி எழுப்பினார்கள். பின்னர், மனுதாரரின் கோரிக்கையை, அரசு அதிகாரிகள் குழு ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்' என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தடை விதிக்கக் கூடாது
முஸ்லிம்கள் குர்பானி கொடுப்பதை தடுப்பது என்பது, மத உரிமைகளில் தலையிடும் செயல் என்றும், மத அனுஷ்டானங்களை பின்பற்ற தடை ஏற்படுத்துவது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்றும் கூறுகிறார் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகி நிஃமத்துல்லா.

மீண்டும் விசாரணை
பொது இடங்களில் விலங்குகள் பலியிடுவதற்கு எதிரான வழக்கில், அந்த இடங்களை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் தலைமை காஜியும் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு நாளை அல்லது நாளை மறுநாள் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications