"காடுகளை பாதுகாக்க வேண்டும்.. இணைந்து பணியாற்றவும் தயார்!" சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி பளீச்
உதகை: சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நீதித்துறை மற்றும் வனத்துறை இணைந்து செயலாற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் உதகை தமிழ்நாடு விருந்தினர் மாளிகையில் வனத்துறை அதிகாரிகள் மாநாடு இன்று நடைபெற்றது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தொடங்கி வைத்த இந்த மாநாட்டில் மாநிலத்தின் பல முக்கிய வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முனீஸ்வர் நாத் பண்டாரி
இந்த மாநாட்டில் பேசிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, ''காட்டை அழித்தால் நாமும் அழிந்து விடுவோம். காடுகளைப் பாதுகாக்கவே நீதித்துறை பல உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது. அதேபோல பொதுமக்களிடமும் காடுகளைப் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நாட்டிலேயே அதிகப்படியான வனப்பரப்பை கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு 2ஆவது இடத்தில் உள்ளது.

செலவு
நமது காடுகளில் இருக்கும் களைச் செடிகள், அந்நிய தாவரங்கள், குப்பைகள் உள்ளிட்ட பொருட்களை அகற்ற மனித ஆற்றலும் நிதியும் செலவாகிறது. ஆனால், காடுகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இருந்தால், இந்த நிதியை வளர்ச்சி பணிகளுக்குப் பயன்படுத்தலாம். எனவே, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிப் பொறுப்பை உணர்ந்து அனைவரும் பணியாற்ற வேண்டும்.

பருவநிலை மாற்றம்
சமீப ஆண்டுகளாகப் பருவநிலை மாற்றம் காரணமாக வெள்ளம், வறட்சி போன்ற சுற்றுச்சூழல் சீர்கேடுகள் நடைபெறுகின்றன. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், அவற்றைச் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் பகுதிகளில் மக்கள் தண்ணீருக்காகப் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது. ஆனால், தமிழ்நாட்டிலேயே அதிகளவில் நீர்நிலைகள் உள்ளன.

இரு துறைகள்
வனத்துறையினருக்குப் பலவேறு பிரச்சினைகள் உள்ளன. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவே சில விஷயங்களில் நீதிமன்றம் தலையிடுகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இரு துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்காவிட்டால் வரும் காலங்களில் பேரழிவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அரசு முனைப்புடன் இருக்கிறது. சதுப்புநிலங்கள் மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன் அவற்றைச் சீரமைப்பது முக்கிய பணியாகும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications