டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் நியமனம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை: டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக புதிதாக 11 பேர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து பாமக மற்றும் திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால் தேர்வாணையத்தில் 10 உறுப்பினர்களின் இடம் காலியாக இருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய முன்னாள் தலைவரும், உறுப்பினருமான பாலசுப்பிரமணியன் ஓய்வு பெற்றதை அடுத்து தேர்வாணையத்திற்கு 11 புதிய உறுப்பினர்களை தமிழக அரசு நியமித்தது.
இதையடுத்து டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக அதிமுக பிண்ணனி கொண்டவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக கூறி இதை எதிர்த்து பாமக மற்றும் திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இது தொடர்பான மனு, உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார்.
இதுகுறித்து தமிழக அரசின் முதன்மை செயலர், டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் செயலர், கவர்னரின் தனிச்செயலர் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட 11 டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களும் பதிலளிக்க வேண்டும் என்று கூறி விசாரணையை வரும் மார்ச் 4-ம் தேதிக்கு நீதிபதி சுப்பையா ஒத்திவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications