சட்டம்தான் எழுத்தைக் கட்டுப்படுத்தும்: "மாதொருபாகன்" வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
சென்னை: சட்டத்தை தவிர வேறு யாரும் எழுத்துக்கு கட்டுப்பாட்டை நிர்ணயிக்க முடியாது என்று மாதொருபாகன் நாவல் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய 'மாதொரு பாகன்' என்ற நாவல் 2010-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேரோட்டத்தின் மாயை பற்றியும், குழந்தையில்லா தம்பதிகளின் வீணான முயற்சிகள் குறித்தும் எழுதியுள்ளார்.
நாவல் வெளியிடப்பட்டபோது எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தற்போது திடீரென இந்த நாவலின் எதிர்ப்பாளர்களும் சாதிய அமைப்புகளும் சேர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதையடுத்து நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்த அமைதிக் குழுக் கூட்டத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் நாவலில் உள்ள ஆட்சேபகரமான பகுதிகளை நீக்கிவிடுவதாகவும் சந்தையில் விற்காத மீதமுள்ள நாவலை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் இனிமேல் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் எழுதப்போவதில்லை என்றும் பெருமாள் முருகன் உறுதியளித்தார். இதனடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டார்.
இந்த அமைதிக் கூட்ட முடிவை எதிர்த்து பெருமாள் முருகனுக்கு ஆதரவாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தலைவர் ச.தமிழ் செல்வன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சுந்தரேஷ் பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கவே அமைதிக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், எதை எழுதுவது, எழுதக் கூடாது என்பதை சட்டத்தால் மட்டுமே முடிவு செய்ய முடியும். சட்டத்தை தவிர வேறு யாரும் நிர்ணயிக்க முடியாது என்று கூறினர். மேலும் இந்த வழக்கில் எழுத்தாளர் பெருமாள் முருகனையும் சேர்க்க உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications