மதுரை சித்திரை திருவிழா - மாட வீதிகளில் ஆடி அசைந்து வரும் தேர் - பக்தர்கள் தரிசனம்
மதுரையில் பிரசித்தி பெற்ற மீனாட்சியம்மன் அம்மன் ஆலய சித்திரை திருவிழா தேரோட்டம் தொடங்கியது.
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. திருக்கல்யாணம் முடிந்த புதுமண தம்பதிகள் இன்று திருத்தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
மதுரையில் சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரியும் அம்மையும், அப்பனும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்தருகின்றனர்.
திருக்கல்யாணம்
சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பத்தாம் திருநாளான நேற்று மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனைத் காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்திருந்தனர். அவர்கள் திருக்கல்யாணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
கல்யாண விருந்து
திருமணம் முடிந்த பிறகு விருந்து நடைபெற்றது. சுமார் ஒரு லட்சம் பேர் வரை விருந்து சாப்பிட்டு விட்டு மொய் எழுதிச் சென்றனர். இதனைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு சுந்தரேசுவரர் யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி 4 மாசி வீதிகளிலும் வலம் வந்தனர்.
தேரோட்டம்
சித்திரை தேரோட்டம் மதுரையில் பிரசித்தி பெற்றது. திருக்கல்யாணம் முடிந்த தம்பதிகள் மதுரை மக்களை காண தேரில் எழுந்தருளி வலம் வருவார்கள். 11வது நாளான இன்று சுந்தரேஸ்வரர் - பிரியாவிடை அம்மன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் வீதியுலா வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
ஆடி அசைந்து வரும் தேர்
தேர் நிலையில் இருந்து புறப்பட்டு 4 மாசி வீதிகள் வழியாக ஆடி அசைந்துவரும் அழகை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்து வருகின்றனர். தேருக்கு முன்பாக கோவில் மாடுகள் , ஒட்டகங்கள் செண்டை மேளம் அணிவகுப்பு ஆகியவை நடைபெற்று வருகிறது. ஏராளமானோர் நடனமாடிக்கொண்டும் செல்கின்றனர்.
போலீஸ் பாதுகாப்பு
சித்திரை திருவிழா தேரோட்டை முன்னிட்டு மதுரை முழுவதும் சுமார் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 10 ம் தேதி நடைபெற இருக்கிறது.