பூசாரி தற்கொலையில் ஓ.பி.யின் தம்பி மிரட்டல் விடுப்பதாக புகார்.. உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு
மதுரை : கோவில் பூசாரி தற்கொலை வழக்கில் தமிழக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரும், பெரியகுளம் நகராட்சி தலைவருமான ஓ.ராஜா, பாண்டி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை பெரியகுளம் நீதிமன்றம் விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.
தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுப்புராஜ் மகன் நாகமுத்து. இவர் கைலாசப்பட்டி கைலாசநாதர் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். கடந்த 7.12.2012 அன்று நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார்.

இவரை தற்கொலைக்கு தூண்டியதாக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரும், பெரியகுளம் நகராட்சி தலைவருமான ஓ.ராஜா, மற்றும் பாண்டி உள்பட 7 பேர் மீது தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு பெரியகுளம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை பெரியகுளம் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று தற்கொலை செய்துகொண்ட நாகமுத்துவின் தந்தை சுப்புராஜ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
அந்த மனுவில், ஓ.ராஜா உள்பட 7 பேரும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள். இந்த வழக்கு சம்பந்தமாக எனக்கு மிரட்டல் வருகிறது. பெரியகுளம் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றால் எனது உயிருக்கு பாதுகாப்பு இருக்காது. எனவே, இந்த வழக்கை தேனி மாவட்டம் அல்லாமல் வேறு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் டி.லஜபதிராய், பினேக்காஸ் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
மனுவை விசாரித்த நீதிபதி, பெரியகுளம் நகராட்சி தலைவர் ஓ.ராஜா உள்பட 7 பேர் மீதான வழக்கை பெரியகுளம் நீதிமன்றம் விசாரிக்க தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு சம்பந்தமாக பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர், தென்கரை காவல் ஆய்வாளர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications