மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே பெட்ரோல் குண்டுகள் வீச்சு !
மதுரை: மதுரையில் உள்ள உலகப் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுரம் அருகே மர்மமாக பெட்ரோல் குண்டுகள் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ராஜகோபுரம் எழில்வாய்ந்த ஒன்று. மதுரையின் எந்த திசையில் இருந்து பார்த்தாலும், ஓங்கி உயர்ந்து காணப்படும் அதன் அழகு, கம்பீரம் மிக்கது.

இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே கீழசித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி சந்திப்பு பகுதியில் பழைய சென்ட்ரல் மார்க்கெட் அருகே காலி இடம் உள்ளது. இதன் சுற்றச்சுவர் அருகே பலத்த சத்தத்துடன் வெடி வெடித்தது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியிருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த பகுதியில் உள்ள பொது கட்டண கழிப்பறை அருகே பாட்டில்கள் மற்றும் காலி மண்ணெண்ணெய் கேன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு சோதனை நடத்திய போலீசார் வெடிக்காத இரண்டு பெட்ரோல் குண்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. பெட்ரோல் குண்டுகள் வீசிய மர்ம நபர்கள் குறித்து விளக்குத்தூண் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி நான்கு கோபுர வீதிகளிலும் எப்போதும் பரபரப்பாக இருக்கும் சூழ்நிலையில் அந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications