விஜயதாரணி எம்.எல்.ஏ மீது போலீசில் புகார்: மகளிரணி துணைத்தலைவி குற்றச்சாட்டு
சென்னை: காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் இளங்கோவனை தரக்குறைவாக பேசியதாக மகளிரணி தலைவி விஜயதாரணி எம்.எல்.ஏ மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமூர்த்தி பவனில் விஜயதாரணி எம்.எல்.ஏவின் பேனர் கிழிப்பு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. விளக்கம் கேட்ட விஜயதாரணியை, கட்சியை விட்டு வெளியே போகச்சொன்னார் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் என்பது புகாராகும். இதனையடுத்து கட்சித்தலைவர் பதவியில் இருந்து இளங்கோவனை நீக்கவேண்டும் என்று கட்சித்தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார் விஜயதாரணி.
அதே நேரத்தில் தான் விஜயதாரணியை தரக்குறைவாக பேசவில்லை என்று மறுத்துள்ளார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். இந்த நிலையில், சத்யமூர்த்தி பவனில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணியை அவதூறாக பேசியதாக சென்னை, அண்ணாசாலை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விஜயதாரணியை தரக்குறைவாக பேசிய இளங்கோவனை கைது செய்ய வேண்டும் எனவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு பதிலடியாக அதே அண்ணாசாலை காவல் நிலையத்தில் விஜயதாரணி மீது புகார் அளித்துள்ளார் மகளிரணி துணைத்தலைவி மனோகரி. கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை தரக்குறைவாக பேசியதாகவும், அவரை கைது செய்யவேண்டும் என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளார் மனோகரி.
கட்சித்தலைவரை கைது செய்யக்கோரி காவல் நிலையத்தில் மகளிரணி தலைவி புகார் அளிப்பதும், மகளிரணி தலைவி மீது நடவடிக்கை எடுக்க கோரி துணைத்தலைவி காவல் நிலையத்தில் புகார் அளிப்பதும் காங்கிரஸ் கட்சியில் மட்டுமே நடக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.