விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக்கியதால் ம.ந.கூ.வுக்குத் தோல்வியே...: பழ.கருப்பையா
நெல்லை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டதால் மக்கள் நலக் கூட்டணி தோல்வியைத் தழுவி உள்ளதாகவே தான் கருதுவதாக என முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.
கட்சிக்கு எதிராக பேசியதால் சமீபத்தில் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டவர் சென்னை துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ. பழ.கருப்பையா. கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த அவர், தற்போது திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் நெல்லை, பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பழ.கருப்பையா கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
திமுக வெல்லும்...
தமிழகத்தில் மாற்றத்தையே மக்கள் விரும்புகிறார்கள். இந்த சட்டசபைத் தேர்தலில் திமுக பல இடங்களில் வெற்றிபெற்று முதல்வராக கலைஞர் பொறுப்பேற்பார்.
முத்துக்குமாரசாமி...
அதிமுக ஆட்சியில் மக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க முடியாத நிலை இருந்து வருகிறது. வேளாண் துறையில் ஏற்பட்ட நெருக்கடியால் தற்கொலை செய்த முத்துக்குமாரசாமி குடும்பத்துக்கு திமுக ஆட்சிக்கு வந்தால் நியாயம் கிடைக்கும்.
மதுவிற்பனை...
மதுக்கடைகளால் அதிக வருமானத்தை ஈட்டியதே அதிமுக அரசின் சாதனையாகஉள்ளது. தொழிலை வளர்ப்பது போல மதுவிற்பனைக்கு இலக்கு வைத்து விற்பனை செய்தது மக்களுக்கு நல்லதல்ல.
ம.ந.கூட்டணிக்கு தோல்வி...
தமிழகத்தில் புதிய அணியாக உருவெடுத்த மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டதன் மூலம் தோல்வியைத் தழுவி உள்ளதாகவே கருதுகிறேன்' என அவர் தெரிவித்தார்.