தமிழக ரசிகர்களுக்காக மற்றுமொரு செய்தி சேனல் "மாலைமுரசு" டிவி
சென்னை: மாலை முரசு மாலை நாளிதழ் தற்போது மாலை முரசு டி.வி. என்ற தொலைக்காட்சி சேனலை தொடங்கியுள்ளது. இந்த டிவி ஒளிபரப்பை இன்று சென்னை ஆயிரம் விளக்கு அலுவலகத்தில் கண்ணன் ஆதித்தன் துவக்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் சன்டிவி, ராஜ் டிவி, ஜெயாடிவி, கலைஞர் டிவி, மக்கள் தொலைக்காட்சி, கேப்டன் டிவி, புதிய தலைமுறை, சத்தியம் டிவி என 20க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் உள்ளன.
இதில் செய்தி சேனல்கள், சன் நியூஸ், கலைஞர் செய்தி, கேப்டன் நியூஸ், ஜெயா ப்ளஸ், புதிய தலைமுறை, சத்தியம், தந்தி டிவி, நியூஸ் 7, நியூஸ் 18 என பல சேனல்கள் செய்திகளை வழங்கி வருகின்றன. மாலை பத்திரிகையான மாலை முரசு நாளிதழ் சார்பில் தற்போது புதிதாக டிவி சேனல் தொடங்கப்பட்டுள்ளது.
சிவந்தி ஆதித்தனாரின் குடும்பத்தின் பொறுப்பில் உள்ள தினத்தந்தி நாளிதழ் சார்பில் தந்தி டிவி தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது ராமச்சந்திர ஆதித்தனாரின் குடும்பத்தின் பொறுப்பில் உள்ள மாலை முரசு மாலை நாளிதழ் சார்பில் மாலைமுரசு டிவி தொடங்கப்பட்டுள்ளது.
கலைஞர் டிவி சார்பில் ஏற்கனவே முரசு டிவி ஒளிபரப்பாகி வரும் நிலையில் மாலை முரசு டிவி இன்று முதல் தனது ஒளிபரப்பை தொடங்கியுள்ளது. மாலை முரசு அலுவலகம் உள்ள ஆயிரம் விளக்கு அலுவலகத்தில் கண்ணன் ஆதித்தன் ஒளிபரப்பை துவக்கி வைத்தார்.
தமிழ் மாலை நாளிதழ்களின் முன்னோடி மாலை முரசு. இன்றுள்ள மாலை நாளிதழ்களுக்குத் தாய் போல விளங்கியது மாலை முரசு. இந்த நிலையில், டிவியில் நுழைந்துள்ள மாலை முரசு, மற்ற சேனல்களுக்கு போட்டியாக இருக்குமா? பார்க்கலாம்.