எம்.ஏ.எம். Vs முத்தையா: செட்டிநாடு அரண்மனையில் ரஜினி பட சூட்டிங் நடத்த எதிர்ப்பு: போலீசில் புகார்
சென்னை: தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமிக்குச் சொந்தமான சென்னை செட்டிநாடு அரண்மனையில் ரஜினியின் கபாலி படத்தின் படப்பிடிப்பு நடத்த ஆட்சேபம் தெரிவித்து செட்டிநாடு குழுமத் தலைவர் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா தரப்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் கபாலி படத்தின் படப்பிடிப்பு சென்னை மாநகரில் முக்கிய இடங்களில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது.

செட்டிநாடு அரண்மனையில் சூட்டிங்
ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு அரண்மனையில் கபாலி படத்தின் சூட்டிங் நடத்த எம்.ஏ.எம்.ராமசாமி அனுமதி அளித்ததால், செவ்வாய்கிழமையன்று காலையில் அரண்மனையில் ‘கபாலி' படப்பிடிப்பு தொடங்கியது. ரஜினிகாந்த் அரண்மனை முகப்பில் காரில் வந்து இறங்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.
முத்தையா எதிர்ப்பு
இந்நிலையில், போலீஸாருடன் அரண்மனைக்கு வந்த முத்தையா தரப்பு 10 வழக்கறிஞர்கள், "நீதி மன்ற உத்தரவை மீறி படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தது நீதிமன்ற அவமதிப்பு என்பதால் நாங்கள் நோட்டீஸ் கொடுக்க வந்திருக்கிறோம்" என்று கூறி பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது.
கபாலியில் பரபரப்பு
இதை ஏற்க மறுத்த எம்.ஏ.எம்.ராமசாமி தரப்பினர், "நீதிமன்ற அவமதிப்பு என்றால் நீதிமன்றத்தில் முறையிடுங்கள். நீங்கள் தரும் நோட்டீஸை வாங்க முடியாது" என்று எதிர்வாதம் செய்தனர். இதனால் படப்பிடிப்பு தளத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
யாரை கேட்க வேண்டும்
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தொழிலதிபர் ஏ.சி.முத்தையா, "எம்.ஏ.எம். ராமாசாமி, தனக்குச் சொந்தமான அரண்மனையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு யாரைக் கேட்க வேண்டும்? இதில் நாங்கள் எந்த இடத்திலும் நீதிமன்ற அவமதிப்பு செய்யவில்லை" என்று சொன்னார்.
சுவீகாரம் ரத்து
செட்டிநாடு அரண்மனையின் ஒரு பகுதியில் எம்.ஏ.எம்.ராமசாமியும் இன்னொரு பகுதியில் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையாவும் வசிக்கிறார்கள். இந்த நிலையில், முத்தையாவின் சுவீகாரத்தை ரத்து செய்துவிட்டதாக அறிவித்த எம்.ஏ.எம்.ராமசாமி, அரண்மனையை விட்டு முத்தையா வெளியேற வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
போலீசில் புகார்
இதையடுத்து, இந்த விவகாரத்தில் 'தற்போதைய நிலையே தொடர வேண்டும்' என்று சொல்லி விசாரணையை ஒத்தி வைத்தது நீதிமன்றம். இந்த நிலையில் படப்பிடிப்பு நடத்த எம்.ஏ.எம் ராமசாமி அனுமதி அளித்துள்ளதைற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசில் புகார் அளித்துள்ளார் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா.












Click it and Unblock the Notifications