விசில் சின்னத்துக்கு ஓட்டு போட்டதை வீடியோவாக இன்ஸ்டாவில் பதிவிட்டவர் கைது! தேர்தல் ஆணையம் அதிரடி
திருப்பத்தூர்: விசில் சின்னத்திற்கு வாக்களிப்பதை வீடியோவாக பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் தொகுதியில் தேர்தல் ஆணையம் எச்சரிக்கையை மீறி வாக்களித்துவிட்டு அதனை சமூக வலைத்தளத்தில் வீடியோவாக பதிவிட்ட சக்திவேல் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். வாக்குச்சாவடிக்குள் அவர் வீடியோ எடுத்ததை சிசிடிவி மூலம் அதிகாரிகள் உறுதி செய்தனர்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி வாக்கு என்பது ரகசியமாக வைக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதை வெளியே கூறுவது குற்றமாக கருதப்படும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 12 பிரிவு படி குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். யாருக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படுத்தினால் அவருக்கு 3 மாத சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படலாம் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

செல்போன் கொண்டு செல்லக்கூடாது
தமிழக சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜனநாயக கடமையை ஆற்ற வரும் வாக்காளர்களுக்கு சிறப்பான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் தங்கள் செல்போனை எடுத்து செல்ல அனுமதி கிடையாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குச்சாவடிக்கு வெளியே செல்போன்களை வைத்து செல்ல தனி இடவசதி அளிக்கப்பட்டு இருந்தது. வாக்காளர்கள் தாங்கள் கொண்டு வந்த செல்போனை அங்கே ஒப்படைத்துவிட்டு வாக்கு செலுத்திய பிறகு தங்கள் செல்போனை எடுத்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கைது செய்த போலீசார்
வாக்குச்சாவடிக்குள் செல்போனை எடுத்து சென்று வீடியோ எடுக்க கூடாது.. ரீல்ஸ்கள் போடக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்து இருந்தது. ஆனால் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்திருந்ததை மீறி வாக்குச் சாவடிக்குள் சக்திவேல் என்பவர் செல்போனை கொண்டு போனது மட்டும் இன்றி தான் யாருக்கு ஓட்டு போடுகிறோம் என்பதையும் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
பின்னர், தான் விசில் சின்னத்திற்கு வாக்களித்த வீடியோவை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விசில் சின்னத்திற்கு வாக்களிப்பது போல அவர் பதிவிட்டு இருந்த வீடியோ இணையதளத்தில் பரவிய நிலையில், இது போலீசாரின் கவனத்திற்கும் சென்றது. இதையடுத்து, போலீசார், வாக்குச்சாவடிக்குள் சக்திவேல் வீடியோ எடுத்ததை கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் அதிகாரிகள் உறுதி செய்தனர். இதையடுத்து போலீசார் சக்திவேலை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications