திருவண்ணாமலையில் டுபாக்கூர் டாக்டர் ஊசி போட்டு இளைஞர் பலி- போலி மருத்துவமனைக்கு சீல்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்று ஊசி போட்டுக்கொண்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தலைமறைவாக இருந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி போலி மருத்துவர்களை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலையில் போலி மருத்துவர் போட்ட ஊசியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் அரணாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தினக் கூலியாக இருக்கிறார். கட்டிட வேலைக்கு சென்ற இடத்தில் காலில் அடிப்பட்ட காரணத்தால் அருண் என்ற போலி மருத்துவரிடம் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்பகுதியில் முறையான கல்வித் தகுதியில்லாமல் அல்லோபதி மருத்துவ பயிற்சி எடுத்து வந்த அருண், சுரேஷுக்கு ஊசி போட்டுள்ளார்.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சுரேசுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுரேஷ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து ஊசி போட்ட போலி மருத்துவர் அருண் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார். இதையடுத்து, அருண் நடத்தி வந்த 'அருணாச்சல கிளினிக்'கிற்கு சுகாதார துறையினர் அதிகாரப்பூர்வமாக சீல் வைத்தனர். தலைமறைவான அருணை தேடி வந்தனர். ஏற்கனவே இரண்டு முறை போலியாக மருத்துவம் பார்த்ததாக அருண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த அருணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.