5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. 30 ஆண்டு சிறை தண்டனை விதித்த அரியலூர் கோர்ட் !
அரியலூர்: ஐந்தாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரியலூரைச் சேர்ந்தவர் அடைக்கலசாமி. கடந்த 2010-ல் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மதாபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சேர்ந்த 5ம்வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் அடைக்கலசாமி கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் அடைக்கலசாமி 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த நிலையில், அந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். இதனிடையே மேலும் ஒரு சிறுமியை அடைக்கலசாமி பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு அரியலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அதில், ஏற்கெனவே ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சிக்கி சிறைத் தண்டனையை அனுபவித்தபோதும் திருந்தாமல் மீண்டும் அதே கொடூரச் செயலை அடைக்கலசாமி செய்துள்ளதால் 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.