அதிமுகவில் சீட் கேட்டு விருப்பமனு கொடுத்த பெண்ணின் கணவர், தங்கையை கடத்திய கும்பல்
திருவண்ணாமலை: சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக எம்.எல்.ஏ சீட் கேட்டு விருப்பமனு கொடுத்த அதிமுக நிர்வாகியின் கணவரையும், தங்கையையும் கத்தி முனையில் மர்ம கும்பம் கடத்திய சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் விருப்பமனுக்கள் தாக்கல் செய்வது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் விரும்பிய தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு மனு அளித்துள்ளனர்.
தனி தொகுதியான வந்தவாசி சட்டசபை தொகுதியில் போட்டியிடுவதற்காக கிரின் பார்க் பள்ளியின் தாளாளர் விஜயன் என்பவரின் மனைவி அன்னபூரணி என்பவர் விருப்பமனு தாக்கல் செய்து இருந்தார். கடந்த 31ம் தேதி விஜயன், தனது மனைவியின் தங்கை அனிதா உடன் பள்ளியில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது 8 கேர் கொண்ட மர்மக்கும்பல், விஜயனின் காரை மறித்து கத்திமுனையில் கடத்தியது.
பல இடங்களுக்கு காரிலேயே சுற்றிய அந்த கும்பல், இருவரையும் துன்புறுத்தியதோடு விருப்பமனுவை திரும்ப பெறுமாறு மிரட்டியுள்ளனர். மிரட்டலுக்கு பயந்த விஜயன், மனுவை திரும்ப பெறுவதாக கூறியதை அடுத்து இருவரையும் மேல்மருவத்தூர் ரோட்டில் விட்டு விட்டு சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அன்னபூரணி வந்தவாசி போலீசில் புகார் அளித்தார். நடந்த சம்பவத்தினை போலீசில் தெரிவித்த விஜயன், என்னுடைய மனைவியின் தங்கையுடன் காரில் வந்துக்கொண்டு இருந்தேன், அப்போது, என்னுடைய காரை பின்தொடர்ந்து வந்த கொண்டு இருந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென காரை வழிமறித்து கடத்தி சென்றனர். பின்னர், ஏரி அருகே நிறுத்தி விருப்பமனுவை திரும்ப பெறுமாறு கத்தி முனையில் மிரட்டினர். மேலும் விற்பனை செய்ய உள்ள நிலத்தின் பணத்தில் ரூ 10 லட்ச ரூபாய் பணம் தரவேண்டும் என்றும் இல்லாவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் அந்த கும்பல் காருக்குள் வைத்து என்னை கத்தியால் தாக்கினர் என்றார். அவர்கள் சொன்னதை செய்வதாக கூறிய பின் கடத்தல் கும்பல் இருவரையும் காஞ்சிபுரம் மாவட்டம் ராமாபுரத்தில் இறக்கி விட்டு சென்றுவிட்டனர் என்று கூறினார். புகாரின் பேரில் காவல்துறையினர் தற்போது வந்தவாசி அதிமுக பிரமுகர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சீட் கேட்டு விருப்பமனு கொடுத்தவர்கள் கடத்தில் மிரட்டப்பட்ட சம்பவம் அதிமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.