மனைவியைக் கொன்றுவிட்டு கள்ளக்காதலனை கத்தியால் குத்திய பெட்ரோல் பங்க் ஊழியர்
சென்னை: சென்னையில் பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் மனைவியைக் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு, அவரின் கள்ளக்காதலனை கத்தியால் குத்திவிட்டு போலீசில் சரண் அடைந்தார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்து வந்தவர் சுதாகர்(32). அவரது மனைவி சுகந்தி(27). அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சுகந்திக்கும் சுதாகரின் நண்பர் இளங்கோவனுக்கும்(30) இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இது குறித்து அறிந்த சுதாகர் மனைவியை கண்டித்தார்.
ஆனால் சுகந்தியோ கள்ளத்தொடர்பை தொடர்ந்தார். இந்நிலையில் சுகந்தி இளங்கோவனுடன் போனில் நேற்று மதியம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த சுதாகர் அவருடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் மனைவியை கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு, சில தெருக்கள் தள்ளி இருக்கும் இளங்கோவனின் வீட்டுக்கு சென்றார். அங்கு வீட்டில் தனியாக இருந்த இளங்கோவனை சுதாகர் கத்தியால் குத்தினார்.
வலி தாங்க முடியாமல் அலறிய இளங்கோவனின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சுதாகர் போலீசில் சரண் அடைந்தார்.












Click it and Unblock the Notifications