சென்னையில் பயங்கரம்: மனைவி, மகனை கழுத்தறுத்து கொன்ற கணவன்-ஒரேநாளில் மூன்று கொலைகளால் பீதி
சென்னை: வடசென்னையில் ஒரே நாளில் அடுத்தடுத்து நடைபெற்ற மூன்று கொலைகளால் பீதி ஏற்பட்டுள்ளது.
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் மனைவி, மகனை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு கணவர் தப்பியோடிவிட்டார். தலைமறைவான அந்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி. நகரை சேர்ந்தவர் குணசுந்தரி (28). இவர் கணவர் மாரிமுத்து. இவர்களது மகன் மகேஷ்குமார் (6). மாரிமுத்து 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மகேஷ்குமார் அந்தப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்தான்.
மாரிமுத்து இறந்த பின்னர் குணசுந்தரி, தனது தாயார் சுந்தரவள்ளியுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் அந்தப் பகுதியில் வசித்த கட்டடத் தொழிலாளி சூலூர்பேட்டையைச் சேர்ந்த ராஜீவுடன் (35) குணசுந்தரிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் இருவரும் திருமணம் செய்யும் முடிவுக்கு வந்தனர்.
இரண்டாவது திருமணம்
ராஜீவும், குணசுந்தரியும் 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பின்னர் ராஜீவ் சரியாக வேலைக்குச் செல்லாமல், மது அருந்திக் கொண்டு ஊதாரித்தனமாக இருந்து வந்தார். மேலும் வீட்டுக்கும் அவர் எப்போதாவதுதான் வந்து போனாராம். இதனால் கணவர்-மனைவிக்கு இடையே பிரச்னை இருந்து வந்தது.
தகராறு செய்த கணவன்
இந்நிலையில் குணசுந்தரி கர்ப்பமடைந்தார். இதற்கு பின்னர் இருவருக்கும் இடையே மேலும் பிரச்னை அதிகரித்தது. இச்சூழ்நிலையில் ராஜீவ், சில நாள்களாக வீட்டுக்கு செல்லவில்லையாம். வெள்ளிக்கிழமை இரவு மது அருந்திவிட்டு ராஜீவ் வீட்டுக்குச் சென்றாராம். அப்போது குணசுந்தரியும், சுந்தரவள்ளியும் அவரிடம் தகராறு செய்தனராம். இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம்.
கழுத்து அறுத்து கொலை
இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை குணசுந்தரி வீட்டில் இருந்து பயங்கர அலறல் சத்தம் கேட்டதாம். அந்த சத்தத்தைக் கேட்ட, அக்கம்பக்கத்தினர் குணசுந்தரி வீட்டுக்கு சென்றனர். அப்போது அங்கிருந்து ராஜீவ் தப்பியோடினாராம்.
வீட்டு வாசலில் சுந்தரவள்ளி பலத்த வெட்டுக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். வீட்டுக்குள் குணசுந்தரியும், மகேஷ்குமாரும் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.
சடலங்கள் மீட்பு
இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சுந்தரவள்ளியை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அவர்கள் புது வண்ணாரப்பேட்டை காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து குணசுந்தரி, மகேஷ்குமார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சந்தேகத்தில் தகராறு
மேலும் இந்த கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினர் முதல் கட்ட விசாரணையில், ராஜீவுக்கு குணசுந்தரியின் நடத்தையின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. குணசுந்தரியின் வயிற்றில் இருந்த 4 மாத கர்ப்பத்தை கலைக்கக் கோரி தகராறு செய்துள்ளார். பிரச்சினை மேலும் அதிகரிக்கவே ராஜீவ் 3 பேரையும் அரிவாளால் வெட்டி அதில் இருவர் இறந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக தலைமறைவாக இருக்கும் ராஜீவை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் புது வண்ணாரப்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மருந்து விற்பனை பிரதிநிதி கொலை
சென்னை மண்ணடியில் தனியார் மருந்து நிறுவனத்தின் பிரதிநிதி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாக இருக்கும் அவரது நண்பர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர் சு.கனகராஜ் (38). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருந்து நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்தார். இதற்காக மண்ணடி அப்பாசாமி செட்டித் தெருவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 4-வது தளத்தில் நண்பர்களுடன் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார்.
பூட்டப்பட்ட கதவு
கனகராஜ் குடும்பத்தினர் ஊரில் இருந்தனர். இந்நிலையில் கனகராஜை அவர் மனைவி சித்திரைச் செல்வி செல்போன் மூலம் வெள்ளிக்கிழமை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் கனகராஜ் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததாம். மேலும் அன்று முழுவதும் கனகராஜ் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால், செல்வி வேளச்சேரியில் வசிக்கும் கனகராஜியின் சகோதரர் கிருஷ்ணகுமாரிடம் விஷயத்தைக் கூறினார். உடனே கிருஷ்ணகுமார் அன்று இரவு கனகராஜ் தங்கியிருந்த வீட்டுக்கு வந்தார், அப்போது அந்த வீடு பூட்டப்பட்டிருந்ததால் அங்கிருந்து சென்றுவிட்டார்.
வெட்டிக்கொலை
இந்நிலையில் சனிக்கிழமை காலை மீண்டும் அவர் வந்தார். அப்போதும் கனகராஜ் வீடு பூட்டப்பட்டு கிடந்ததால், சந்தேகமடைந்த அவர் எஸ்பிளனேடு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்த வீட்டின் கதவு பூட்டை உடைத்து திறந்து உள்ளே சென்றனர்.அப்போது அங்கு கனகராஜ், அரிவாளால் வெட்டப்பட்டு இறந்துகிடந்தார்.
உடனடியாக காவல்துறையினர் கனகராஜ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
நண்பர்களுக்குள் தகராறு
மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரித்தனர். விசாரணையில் கனகராஜ், ஊரில் இருக்கும் தனது குடும்பத்தை இங்கு அழைத்து வர உள்ளதாகக் கூறி, நண்பர்களை வேறு வாடகை வீட்டுக்கு செல்லுமாறு தெரிவித்து வந்தாராம், இது தொடர்பாக கனகராஜுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு இருந்தது வந்ததாம்.
கொலை செய்தார்களா?
இந்த பகையின் காரணமாக கனகராஜ் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கனகராஜூ உடன் தங்கியிருந்த நண்பர்கள் செல்போன்கள் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதால் அவர்கள் மீதான காவல்துறையினரின் சந்தேகம் அதிகரித்துள்ளது. இதையடுத்து தலைமறைவாக இருக்கும் கனகராஜின் நண்பர்களைத் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மூன்று கொலைகளால் பீதி
ஒரே நாளில் மூன்று கொலைகள் நடைபெற்றுள்ளதால் வடசென்னை பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.