கல்யாணமண்டபத்தில் நகை, பணத்தை திருடிய திருடன்... சிசிடிவி வீடியோ மூலம் போலீஸ் வேட்டை
சென்னை: குரோம்பேட்டையில் திருமண மண்டபத்தில் மணமகள் அறையில் இருந்த தங்க நகை, வெள்ளி பொருட்கள், மொய் பணம் திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
மறைமலை நகரை அடுத்த காட்டாங்கொளத்தூர் ஸ்டோ ஒன் 2வது தெருவை சேர்ந்தவர் காமராஜ், 56. இவர், அதே பகுதியில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் தீபிகாவிற்கும், பெருங்களத்தூரை சேர்ந்த பாலாஜி என்பவருக்கும் குரோம்பேட்டை சி.எல்.சி ஒர்க்ஸ் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடந்தது.

சனிக்கிழமையன்று மாலை திருமண வரவேற்பு நடந்தது. நிகழ்ச்சி முடிந்தவுடன் பரிசு பொருட்கள் அனைத்தையும் மணமகள் அறையில் வைத்து விட்டு மணமகள் உள்ளிட்ட உறவினர்கள் சாப்பிட சென்று விட்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் மணமகள் அறையில் நுழைந்து அங்கு பையில் வைத்திருந்த பல ஆயிரம் மொய் பணம், 6 சவரன் நகை, 4 பட்டுப்புடவைகள், அரை கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்றுவிட்டார்.
மணமகள் வீட்டார் உணவு சாப்பிட்டு முடிந்ததும், அறைக்கு வந்து பார்த்தபோது அந்த பையை காணவில்லை. மண்டபம் முழுவதும் தேடி பார்த்தும் பை கிடைக்கவில்லை. இதுகுறித்து குரோம்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் மண்டபத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் திருமண மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது மர்ம ஆசாமி ஒருவன், மணமகள் அறையில் இருந்து நகை, பணம் இருந்த பையை திருடிக்கொண்டு நைசாக வெளியேறும் காட்சி பதிவாகி இருந்தது. வீடியோவில் பதிவான மர்ம நபர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இரு வீட்டாரிடமும் உள்ள வீடியோவில் பதிவான நபரின் படத்தை போலீசார் கண்டுபிடித்த போதும், அவர் யார் என்று தெரியவில்லை என கூறினர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. குரோம்பேட்டை பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications