கூடுவாஞ்சேரியில் பெண் என்ஜீனியரை பொது இடத்தில் பலாத்காரம் செய்ய முயற்சி – வாலிபர் கைது
சென்னை: சென்னை கூடுவாஞ்சேரியில் பெண் பொறியாளர் ஒருவரை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கம் விவேகானந்தர் தெரு, வள்ளலார் நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பரசன். இவர் நேற்று முன்தினம் 8 மணிக்கு தாம்பரத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு அரசு பேருந்தில் வந்து கொண்டிருந்தார்.
அந்த பஸ்சில் கூடுவாஞ்சேரியில் தங்கி சிங்கபெருமாள்கோவில் அருகே உள்ள மகேந்திராசிட்டியில் என்ஜீனியராக வேலை செய்யும் 24 வயது பெண் இருந்தார்.
இவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர். கூடுவாஞ்சேரியில் அவர் இறங்கியதும் பஸ்சில் இருந்த அன்பரசனும் இறங்கினார். சாலையை கடப்பதற்காக நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் நின்று கொண்டிருந்தார். அப்போது சற்றும் எதிர்பாராத விதத்தில் அந்த வாலிபர் பெண் என்ஜீனியரை பலாத்காரம் செய்ய முயன்றார்.
இதைப் பார்த்து அதிர்ந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து கூடுவாஞ்சேரி போலீசில் ஒப்படைத்தனர். அந்த பெண் அளித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் வழக்குப்பதிவு செய்து அன்பரசனை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.