ஊழல் பற்றி ஆளுநர் பேசியதற்கு பிறகு, தமிழக அரசியலில் நடந்த பரபரப்புகளை கவனித்தீர்களா?
சென்னை: துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக ஆளுநர் தெரிவித்ததாக வெளியான கருத்துக்கள், பிரதமர் மோடியுடனான எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு, இதையடுத்து நக்கீரன் கோபால் கைது என அடுத்தடுத்து தொடர்ந்து அரசியல் பரபரப்புகள் தமிழகத்தில் அரங்கேறியுள்ளன.
இச் சம்பவங்கள் அனைத்தையும், இணைத்து வைக்கும் அளவிற்கு முடிச்சுகள் இருப்பதாக கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
சென்னை தி.நகரில் நடைபெற்ற உயர்கல்வி குறித்த கருத்தரங்கில் பங்கேற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பல கோடி ரூபாய் பணம் கொடுத்து துணைவேந்தர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்று பேசியதாக செய்திகள் வெளியாகின.
[ திமுகவிலிருந்து இந்துக்கள் எல்லாரும் வெளியேவாங்க.. எச்.ராஜா சர்ச்சையோ சர்ச்சை! ]

ஆளுநரே சொல்லியாச்சு
இதையடுத்து அன்றைய தினமே எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்ட தகவலில், இந்த ஆட்சியில் ஊழல் நடைபெற்றுள்ளது என்று திமுக சார்பில் புகார் அளித்தபோது ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், இப்போது ஆளுநரே ஊழல் நடைபெற்றுள்ளதை உறுதி செய்துள்ளார். முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் பதவிகளை பறிக்க வேண்டும் என்று காட்டமாக தெரிவித்தார். இது அரசில் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.

மோடியுடன் சந்திப்பு
இதற்கு இரண்டு நாள் கழித்து, அதாவது எட்டாம் தேதி, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டிய பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமி, அதன்பிறகு அளித்த பேட்டியில் கூறினார்.

ஆளுநர் மறுப்பு
இந்த நிலையில் அக்டோபர் 9 ஆம் தேதியான நேற்று, ராஜ்பவன், விளக்க அறிக்கை வெளியிட்டது. அதில் துணைவேந்தர்கள் நியமனம் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேசியதை பற்றி பலவிதமான செய்திகள் வெளியாகி வருகின்றன. கல்வியாளர்கள் மற்றும் பலருடன் பேசியதில் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் நியமனத்தில் பல கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டது தெரியவந்தது. என்னால் இதை நம்ப முடியவில்லை. இந்த நிலை மாற வேண்டும் என்று நான் முடிவு செய்தேன். அதன் பிறகு இன்றுவரை தகுதி அடிப்படையில்தான் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விளக்கமளித்தார்.

ஆளுநர் சர்ச்சைகள்
இந்த நிலையில்தான் திடீரென நிர்மலா தேவி மற்றும் ஆளுநரை தொடர்புபடுத்தி கட்டுரையை வெளியிட்ட நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால், நேற்று, கைது செய்யப்பட்டார். ஒரு பக்கம் அரசில் ஊழல் நடைபெற்றதாக ஆளுநர் குற்றச்சாட்டு சாட்டி பரபரப்பை ஏற்படுத்திய அடுத்த, சில நாட்களிலேயே ஆளுநர் தொடர்பான சர்ச்சை ஒன்று நாடு முழுக்க எதிரொலிக்க, கோபால் கைது உதவியுள்ளது. தான் தப்பான அர்த்தத்தில் அப்படி எல்லாம் பேசவில்லை என்று விளக்கம் அளித்து துணைவேந்தர்கள் நியமனம் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஆளுநர்,. நக்கீரன் கோபால் கைது மற்றும் விடுதலையை தொடர்ந்து நிர்மலா தேவி விவகாரமும் முற்றுப்பெற்றுவிட்டது. இவை எல்லாம் கடந்த 4 நாட்களில், எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக தமிழகத்தில் நடந்த அரசியல் பரபரப்புகள்.












Click it and Unblock the Notifications