மாசி மக புனித தீர்த்த வாரி… பார்த்தசாரதி மெரினாவில் எழுந்தருளி நல்லாசி
மாசி மக பௌர்ணமியையொட்டி பார்த்தசாரதி உற்சவ மூர்த்தி மெரினா கடற்கரையில் எழுந்தருளி நல்லாசி பாலித்தார்.
சென்னை: மாசி மக பௌர்ணமியையொட்டி தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர்.
கும்ப ராசியில் சூரியன் இருக்கும் போது சந்திரன் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார் என்றும் இந்நாளே மாசி பவுர்ணமியுடன் கூடிய மாசி மகமாக திகழ்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
மாசி மகம். மகாவிஷ்ணு, உமாமகேஸ்வரன், முருகன் ஆகிய 3 தெய்வங்களுக்கும் உகந்த நாள் மாசி மகம். உமா தேவியார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில்தான் தட்சணின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார் என்பதால் மிகவும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது.
கடலாடும் நாள்
தீர்த்தமாடும் நாள் பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக் கடலில் இருக்கும் ஆன்மா, இறைவனது அருட்கடலை வேண்டும் நாளே மாசி மகத்தின் சிறப்புபாகக் கூறப்படுகிறது. இந்த நாளை ‘கடலாடும் நாள்' என்றும் ‘தீர்த்தமாடும் நாள்' என்றும் சொல்வார்கள். புண்ணிய இடங்களில் தீர்த்தமாட முடியாதவர்கள் விரதம் இருந்து கோயிலுக்கு சென்று உமாமகேஸ்வரனை தரிசிப்பார்கள்.
கும்பகோணம் மகாமகம்
தமிழகத்தை பொருத்தவரை கும்பகோணத்தில் மாசி மகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வடஇந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். பிற ஸ்தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் சிறப்பு.
மெரினாவில் பார்த்தசாரதி
சென்னையில் மாசி மகம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மெரினா கடற்கரையில் எழுந்தருளி அருளாசி வழங்கினார். இதனை பார்க்க பக்தர் அதிகளவில் கூடியிருந்தனர்.
தீர்த்தவாரி
அதேபோல மயிலாப்பூரில் உள்ள மாதவ பெருமாள், கபாலீஸ்வரர், காரணீஸ்வரர், விருப்பாக்ஷீஸ்வரர்,அப்பர் சுவாமிகள், வெள்ளீஸ்வரர்,வாலீஸ்வரர் ஆகிய சிவ ஆலயங்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் கடற்கரையில் எழுந்தருளினர். தீர்த்தவாரி நடைபெற்ற பின்னர் ஏராளமானோர் கடலில் நீராடினர்.