காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு... வட தமிழகத்தை உலுக்கி எடுக்கிறது கன மழை
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை தற்போது தாழ்வு மண்டலமாகியுள்ள நிலையில் ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாழ்வு மண்டலம் வலுவடையும்போது அது புயலாக மாறக் கூடும் என்றும் வானி்லை மையம் எச்சரித்துள்ளது. இதனால் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு கடலோர தமிழகத்தில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. வடக்கு கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் விடாமல் அடை மழை பெய்து வருகிறது.
கடலில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் சின்னத்திற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளதால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

கடலோர மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகங்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகங்கள், காவல்துறை, தீயணைப்புத் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் விடுமுறைகளை ரத்து செய்து விட்டு பணியில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள தாழ்வு மண்டலம் வலுவடைந்து வருகிறது. இது மேலும் வலுவடையும்போது புயலாக மாறும்.
தமிழகத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் இன்று 5 செமீ மழை பதிவாகியுள்ளது.
சென்னை மிதக்கிறது
சென்னை நகரம் நேற்று இரவு முதல் மிதந்து வருகிறது. நகரமே வெள்ளக்காடாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் மழை நீர் வெள்ளம் போல ஓடிக் கொண்டிருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று பகல் முழுவதும் தோராயமாக 5 செமீ மழை பதிவாகியுள்ளது. இன்று இரவுக்குள் இது 10 செமீட்டராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளியன்று கன மழை
தற்போது பெய்து வரும் மழை மேலும் வலுவடைந்து நாளை முதல் பலத்த மழையாக மாறலாம் என்று தெரிகிறது. குறிப்பாக தீபாவளியன்று மிக பலத்த மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications