கூடங்குளம் அணு உலைகளை மூடுக... இந்தி திணிப்பு கூடாது: மதிமுக மாநாட்டில் தீர்மானம்
சென்னை: கச்சத்தீவை மீட்கவேண்டும். கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு உலைகளை மூட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தித் திணிப்பை கைவிட வேண்டும் என்று மதிமுக மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, மதிமுகவின் திறந்தவெளி மாநாடு பூந்தமல்லியில் இன்று நடைபெறுகிறது. மாநாட்டுக்காக பூந்தமல்லி அருகில் நசரத்பேட்டையில் பிரம்மாண்ட மேடை அமைப்பட்டுள்ளது.

மாநாட்டை வழக்குரைஞர் செ.வீரபாண்டியன் திங்கள்கிழமை மாலை 4 மணியளவில் திறந்து வைத்தார். திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் மாநாட்டுக்குத் தலைமை வகிக்கிறார். இதில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரையாற்றுகிறார்.
மதிமுக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கேரளாவைப் போல தமிழ்நாட்டிலும் மதுக்கடைகளை மூட தமிழக அரசு முன்வரவேண்டும். இந்தக்கோரிக்கைகளை வலியுறுத்தி 2014 அக்டோபர் 2ஆம் தேதி மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் அறப்போராட்டம் நடத்தப்படும்.
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக்குழு ஆகியவற்றை அமைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சிறை முகாம்களில் வதைபடும் ஈழத்தமிழர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
செப்டம்பர் 25ல் ஐ.நா. சபையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை உரையாற்ற விடுத்த அழைப்பை திரும்ப பெறவேண்டும். பன்னாட்டு விசாரணை மன்றத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்க ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஐ.நா. மன்றம் நடுத்தும் விசாரணைக்குழுவிற்கு இந்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இங்குள்ள ஈழத்தமிழர்களிடம் சாட்சியங்களை பதிவு செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின்னரும் தினசரி மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கிறது. தமிழக மீனவர்களின் பிரச்சினையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலங்கைச் சிறையில் வாடும் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இலங்கை உடனான கச்சத்தீவு ஒப்பந்தத்தை பன்னாட்டு விதிகளின் படி ரத்து செய்வதோடு அதனை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் திறனறி தேர்வினை இந்திய அரசியல் சட்டத்தின் 8 வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் நடத்த வேண்டும்.
கூடங்குளத்தில் திறக்கப்பட்டுள்ள 1, 2 அணு உலைகளை மூடவேண்டும். புதிதாக 3,4வது அணு உலைகளை அமைக்கக் கூடாது.
தொழிலாளர் நலன்களை பாதிக்கும் வகையில் தொழிலாளர் நலச்சட்டங்களில் திருத்தம் செய்வதை மத்திய அரசு கைவிட வேண்டும்.
இந்தி மொழியை திணிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications